கொழும்பு: நான் காத்தான்குடிக்கு வர இருப்பதாக கேள்விப்பட்டதுமே அங்குள்ள சில அரசியல்வாதிகளுக்கு கைகால்கள் உதறல் எடுத்துள்ளதாகவும் இன்னும் சிலருக்கு வயிற்றோட்டம் பிடித்துள்ளதாகவும் கேள்விபட்டு நான் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தேன்.
எனது வருகை ஏன் காத்தான்குடி அரசியல்வாதிகளுக்கு இப்படி ஓர் நிலையை ஏற்படுத்தியுள்ளது? ஏன் அவர்கள் எனது வருகையை கேள்விப்பட்டு அச்சம் கொள்ள வேண்டும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் அஸாத் சாலி.
காத்தான்குடியில் ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் எதிர்வரும் 29ஆம் திகதி அஸாத் சாலி நடத்தவிருந்த மக்கள் சந்திப்புக்கு ஆரம்பத்தில் அனுமதி அளிக்கப்பட்டு பின்னர் அது மறுக்கப்பட்டமை தொடர்பாக அஸாத் சாலி ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
இந்த அரசாங்கத்தின் அராஜகத்தின் உச்சகட்டமாக அண்மையில் நான் கைது செய்யப்பட்டு சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது எனக்காகவும் எனது விடுதலைக்காகவும் பிரார்த்தனை புரிந்தும் சாத்வீகமான முறையில் கடையடைப்புக்களைச் செய்தும் குரல் கொடுத்த ஏராளமான மக்கள் கிழக்கு மாகாணத்தில் உள்ளனர்.
இந்த மக்களை நேரடியாகச் சந்தித்து எனது நன்றிக்கடனை நிறைவேற்றுவதற்காகவே நான் எதிர்வரும் 28, 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் அம்பாறை. மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கான விஜயத்தை மேற்கொள்கிறேன்.
அரசியல் மாநாடுகள் நடத்துவதோ அல்லது கருத்தரங்குகள் நடத்துவதோ எனது இந்த விஜயத்தின் நோக்கம் அல்ல. மக்களுக்கு சரியான முறையில் சேவைகளை செய்திருந்தால். மக்களின் தேவைகளை நிறைவேற்றியிருந்தரல். அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால் தனது சமூகத்துக்காக உரிய முறையில் குரல் கொடுத்திருந்தால் எந்தப் பிரதேசத்தின் அரசியல் வாதியும் இன்னொரு பிரதேசத்து அரசியல் வாதிகளின் வருகையைக் கண்டு அஞ்சி நடுங்கத் தேவையில்லை.
இந்தக் கூட்டத்துக்கான அனுமதியை தடுத்து நிறுத்த காத்தான்குடி நகர சபையின் பிரதித் தலைவர் எம்.ஐ.எம்.ஜெஸீம் என்பவர் பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டதாக நான் கேள்விபட்டேன். இவர் அந்தப் பிரதேசத்தின் மார்க்க அறிஞர் ஒருவரின் சீடர் என்றும் நான் கேள்விபட்டுள்ளேன். இவருக்கும் இவருடைய அரசியல் குருவுக்கும் சரியான அரசியல் மற்றும் மார்க்க கருத்துக்கள் போதிக்கப்பட்டிருக்குமானால் இவர்கள் இப்படி கீழ்த்தரமாக நடந்து கொண்டிருக்க மாட்டார்கள்.
கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் காத்ததன்குடியில் எனக்கு வாக்களித்த ஆயிரக்கணக்கான மக்கள் உள்ளனர். நான் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்படாவிட்டாலும் கூட என்னை நம்பி வாக்களித்த அவர்களுக்கு சேவை செய்ய வேண்டிய தார்மீகப் பொறுப்பு எனக்குள்ளது. தேர்தல் காலத்தில் மட்டும் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுவிட்டு அவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு கூத்தும் கும்மாளமுமாகத் தெரியும் அரசியல்வாதி அல்ல நான்.
நீங்கள் காத்தனகுடியில் நான் மக்களை சந்திப்பதை தடுக்கலாம். அது உங்கள் அதிகார வெறியின் உச்ச கட்டம். நிச்சயம் அது நிலைத்து நிற்கும் ஒன்றல்ல. ஆனால் அதேநேரம் காத்தான்குடி மக்கள் என்னை சந்திப்பதை எந்த அரசியல் சக்தியாலும் தடுக்க முடியாது. நான் மக்களை சந்திக்கும் இடத்துக்கு அவர்கள் என்னைத் தேடிவந்து சந்திப்பார்கள் என்று நான் நிச்சயம் நம்புகின்றேன் என்றார்.

Leave a comment