கொழும்பு: வடக்கு மாகாண சபைத்தேர்தலில் 46 சதவீத ஆசனங்களையே ஈபிடிபிக்கு வழங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்வந்துள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தகவல் கிடைத்துள்ளன. அத்துடன் முதன்மை வேட்பாளராக டக்ளஸ் தேவானந்தாவை களமிறங்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
வடக்கு தேர்தலில் கூடிய ஆசனங்களை பெற்றுக்கொள்ள டக்ளஸ் தேவானந்தா முயற்சிகளை மேற்கொண்டிருந்ததாக தொடர்புடைய தரப்புக்கள் தெரிவிக்கின்றன. நீண்ட பேச்சுக்களின் பின்னரே 46 வீத ஒதுக்கீட்டுக்கு மஹிந்த ராஜபக்ஷசம்மதித்ததுடன் டக்ளஸ் தேவானந்தாவை முதன்மை வேட்பாளராக களமிறங்க நிபந்தனை விதித்துக்கொண்டதாக தெரியவருகின்றது.
எனினும் வடக்கு தேர்தலில் வெற்றி தொடர்பாக நம்பிக்கையற்றிருக்கும் டக்ளஸ் தேவானந்தா முன்னாள் நாடாளுமன்ற அங்;கத்தவர் தவராசாவையே களமிறக்க விருப்பங்கொண்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் தற்போது வகித்துவரும் அமைச்சர் பதவியை இழப்பதற்கும் அவர் தயாராகவில்லை. இது தொடர்பான இழுபறி முடிவேதுமின்றி தொடரும் நிலையில் தேர்தல் அறிவிப்பின் பின்னர் இதனை பரிசீலிப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே யாழ்ப்பாணத்தினில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு போட்டியாக வளர்க்கப்படும் சுதந்திரக்கட்சி அமைப்பாளர் அங்கயன் பல ஈபிடிபி முக்கியஸ்தர்களுக்கு வலை வீசி தனது பக்கம் தொடர்ந்தும் இழுத்து வருவதாக கூறப்படுகின்றது. குறிப்பாக கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஈபிடிபி சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த சிறீபதி மாஸ்டர் மற்றும் ரெமீடியஸ் மீனவ பிரதிநிதி பொன்னம்பலம் என பலரும் இம்முறை சுதந்திரக்கட்சி பக்கம் பாய்ந்து தேர்தல் களத்தில் குதிக்கின்றனர்.
இதனிடையே சுதந்திரக் கட்சியின் சார்பில், விடுதலைப்புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் போட்டியிட தீர்மானித்துள்ளாதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்காக இன்று சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் சார்பில் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான நேர்முகத் தேர்வில் தயா மாஸ்டர் கலந்து கொண்டு உள்ளதாக சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
அண்மையில் யாழ். குடாநாட்டுக்கு விஜயம் செய்த பிரதமர் ஜயரட்ணவை தயா மாஸ்டர் சந்தித்து கலந்துரையாடி உள்ளதாகவும் இதன்போது தேர்தலில் வெற்றிபெற பிரதமர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன் தேவையான உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்து இருந்ததாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் தேர்வில் யாழ். மாநகர உறுப்பினரும் சட்டத்தரணியுமான றெமீடியஸ், சாவற்காட்டு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் பொன்னம்பலம் உட்பட 23பேர் இந்த நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டதாகவும் சுதந்திரக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜே/பி
Leave a comment