காத்தான்குடி: காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் 14வது வருட பூர்த்தியை முன்னிட்டு சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் அங்கத்தவர்களை கௌரவிப்பதற்கான வைபவம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவரும் சமூக சேவையாளருமான எம்.ஐ.எம்.ஹாரிஸ் ஜே.பி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், கௌரவ அதிதிகளாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு அதிகாரி ஏ.சீ. அப்துல் அஸீஸ், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் எம்.ரீ.எம். காலித் ஜே.பி, விஷேட அதிதிகளாக காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்ஸா, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம். பரீட், சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எம்.முஸ்தபா, அமானா கிட்ஸ் கொலேஜ் பணிப்பாளர் அன்வர், மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கணக்காளர் சுஹைர் உள்ளிட்ட அதிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் 550 உறுப்பினர்களில் 265 உறுப்பினர்கள் உயர்மட்ட உறுப்பினர்கள், கூடுதலாக சமூகப் பணிகளில் ஈடுபட்டவர்கள் என பல்வேறு படித்தரங்களில் பதக்கமும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
குறித்த சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியம் காத்தான்குடியில் சமூகத்தில் பல்வேறு சமூக,சமய,கல்வி,கலாச்சார மற்றும் விளையாட்டு போன்ற விடயங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment