மட்டக்களப்பு: பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கான அலுவலக உபகரணம் வழங்கலும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு கௌரவிப்பு விழாவும் இன்று வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கௌரவ அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப்பிரிவுகளையும் சேர்ந்த பிரதேச செயலாளர்கள், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர்கள், உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மாவட்ட திட்டமிடல் செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இணைக்கப்பட்டு கிராம சேவையாளர் பிரிவுகளில் கடமைக்கமர்த்தப்பட்டுள்ள பட்டதாரிப் பயிலுனர்களுக்கான அலுவலக பெயர்ப் பலகை, அலுவலக மேசை, கதிரைகள், காகிதாதிகள் அடங்கிய அலுவலக உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இதற்கென மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 345 கிராம சேவையாளர் பிரவுகளுக்கும், தலா 20ஆயிரம் ரூபா வீதம், 6.9 மில்லியன் ருபா செலவிடப்பட்டுள்ளது.
இதன்போது பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டதையிட்டு இலங்கை திட்டமிடல் சேவை சங்க மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகத்தர்களால் கௌரவிக்கப்பட்டார்.

Leave a comment