உலமாக்களுக்கான மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழகம் மௌலவிமார்களுக்கு செய்யும் அநியாயம்- முஸ்லிம் உலமாக் கவுன்சில்

Majeed – பழுளுல்லாஹ் பர்ஹான்

கொழும்பு: பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாவினால் காத்தான்குடியில் அமையப்பெறும் மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழகம் பாராட்டுக்குரியதாகினும் இதன் மூலம் உலமாக்களுக்கு அநியாயம் நடப்பதாகவே தெரிகிறது என அகில இலங்கை முஸ்லிம் உலமா கவுன்சில் குறிப்பிட்டுள்ளது.

இது பற்றி உலமா கவுன்சில் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீதினால் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

மேற்படி பல்கலைக்கழகம் உலமாக்களை கருத்திற்கொண்டு அமையப்பெறுவதாகவும் இது இந்நாட்டு உலமாக்களுக்கு தொழில் வாயயப்பை வழங்கும் எனவும் ஊடகங்கள் மூலம் தாங்கள் தெரிவித்திருந்தீர்கள். உலமாக்களுக்கென ஒரு பல்கலைக்கழகம் என்ற உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது.

எனினும் மௌலவி பட்டம், மற்றும் க.பொ.த உயர்தரம் கற்ற ஒரு மௌலவி இதில் இணைந்து மூன்று வருடங்கள் கல்வி கற்ற பின் அவருக்கு டிப்ளோமா தராதர பத்திரம் வழங்கப்படுவது என்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது உலமாக்களுக்கு செய்யப்படும் அநியாயமாகவே தெரிகிறது.

காரணம் ஒரு மௌலவி இருபது அல்லது இருபத்தியொரு வயதிலேயே மதரசாவிலிருந்து வெளியேறுகிறார். அதன் பின் இப்பல்கலைக்கழகத்தில் இணைந்து இருபத்தி நான்கு  வயதில் வெறும் டிப்ளோமா பட்டத்துடன் வெளியாகிறாரே தவிர பல்கலைக்கழக பட்டதாரியாக வெறியேறவில்லை.

தற்போது இந்த நாட்டின் கல்வி போட்டிச்சிக்கிணங்க அரசாங்க பஸ் ட்ரைவர் கூட பட்டதாரியாக இருக்க வேண்டும் என கூறுமளவிற்கு அரசின் அனைத்து தொழில்களிலும் பட்டதாரிகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும் சூழலில் இருபத்தி நான்கு வயதில் டிப்ளோமாவுடன் வெளியேறும் மௌலவி மீண்டும் பல்கலைக்கழகமொன்றில் சேர்ந்து அங்கு நான்கு வருடங்கள் கல்வி கற்ற பின் சுமார் முப்பது வயதில்தான் பட்டதாரியாக முடியும். அதன் பின் அவர் தொழிலுக்கு முயற்சி செய்து இனவாத அரசாங்கத்தில் முஸ்லிம்கள் ஓரங்கட்டப்படும் இன்றைய சூழலில்  அதனை பெறுவதற்கு சில காலங்கள் செல்லும். ஆக, குறைந்தது முப்பத்திரெண்டு வயதில்தான் அந்த மௌலவியால் திருமணம் முடிக்க முடியும்.

அதுவும் தானே வீடு கட்டி மனைவியை அதில் வைத்திருக்க வேண்டும் என எண்ணம் கொள்ளும் மௌலவி நாற்பது வயது வரை காத்திருக்க வேண்டி வரும். இவற்றின் மூலம் எத்தகைய அநியாயங்கள் மௌலவிமாருக்கு நடக்கின்றன என்பதை இலகுவாக புரிந்து கொள்ள முடியும்.

ஒரு சாதாரண முஸ்லிம் மாணவன் அவன் பதினெட்டு வயதில் க.பொ.த உயர்தரம் சித்தியடைந்து பத்தொன்பது வயதில் பல்கலைக்கழகம் சென்றால் இருபத்தி மூன்று அல்லது இருபத்தி நான்கு வயதில் பட்டதாரியாகி தொழில் பெற  முடியும். ஆனால் ஒரு மௌலவியின் நிலையை எண்ணிப்பாருங்கள். அவர் க.பொ.த சா.தரம், உயர் தரம் மற்றும் அல்ஆலிம் பரீட்சை, மௌலவி பரீட்சை போதாக்குறைக்கு தர்மாச்சாரியா பரீட்சை, இப்போது டிப்ளோமா, அதன் பின் பல்கலைக்கழகம். ஏன் மௌலவிமாருக்கு இத்தகைய அநியாயங்கள்? ஆக தங்களது பல்கலைக்கழகத்தால் இலங்கை அரசும், சர்வதேசமும் ஏற்கும் பட்டப்படிப்பு பத்திரம் வழங்கப்படும் பட்சத்திலேயே இது மௌலவிமாருக்கு நன்மையளிக்குமே தவிர மூன்று வருடத்தில் ஒரு டிப்ளோமா என்பது மிகப்பெரிய அநியாயமாகும்.

சமூகத்துக்கு என்ன அநியாயம் நடந்தாலும் அதனை தட்டிக்கேட்கும் நாம் விசேடமாக எமது மௌலவிமாரின் உரிமைக்குரலாக செயற்படும் நாம் இதனை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. ஆகவே இப்பல்கலைக்கழகத்தை டிப்ளோமா வழங்கும் வியாபார நிறுவனமாக இல்லாது பட்டதாரியாக்கும் உண்மையான பல்கலைக்கழகமாக மாற்றும் படி கேட்டுக்கொள்கிறோம்.

இத சம்பந்தமான விழாவில் கலந்து கொள்ளும்படியான தங்களின் அழைப்புக்கு எமது நன்றி. தவிர்க்க முடியாத தனிப்பட்ட காரணமாக கலந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Published by

Leave a comment