இலங்கையில் முஸ்லிம்களுக்கென்றொரு பல்கலைக்கழகம் உருவாக இடமளிக்க மாட்டோம்: பொதுபலசேனா

images1[1]கொழும்பு: இலங்கை பெளத்த சிங்கள ராஜ்ய நாடாக இருப்பதனால் இங்கு முஸ்லிம்களுக்கென்றொரு பல்கலைக்கழகம் சவூதி அரேபியாவின் உதவியுடன் உருவாகுவதை பொதுபலசேனா ஒரு போதும் அங்கீகரிக்கப் போவதில்லை என்று பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் தெரிவித்தார்.

இந்நாட்டில் சிங்களம், தமிழ், முஸ்லிம் மக்கள் வாழ்கின்ற போதும் தனியாக ஒரு இனத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் எந்தவொரு நிறுவனத்தையும் எமது அமைப்பு ஏற்றுக் கொள்ளாது என்றும் அவர் தெரிவித்தார்.

நேற்று அம்பாறையில் நடைபெற்ற பொதுபல சேனாவின் கிழக்கின் முதலாவது மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாவின் ஏற்பாட்டில் எதிர்வரும் 11ம் திகதி செவ்வாய் காத்தான்குடியிலுள்ள ஹிஸ்புல்லா அரங்கில் முஸ்லீம்களுக்கான பல்கலைக்கழகம் உருவாகுவதற்கான சகல ஒப்பந்த நடவடிக்கைகளும் சவூதி அரேபியாவின் உதவியுடன் கைச்சாத்திட உள்ளமை நன்கு அறிந்த விடயமே.

images1[1]

இதற்காக நாற்பது ஏக்கர் காணிகள் ஒதுக்கப்பட்டு அப்புதிய பல்கலைக்கழகத்திற்கான பெயர் சவூதி அரேபியாவின் மன்னனின் மகனுடைய பெயர் அப்துல் மலிஜ் எனவும் வைக்கப்பட வேண்டும் என்ற நிலையிலேயே இப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட இருக்கின்றது.

இதிலே விஹாமி என்ற இஸ்லாமிய சட்ட அம்சங்களைக் கொண்ட பாடத்திட்டம் உள்வாங்கப்படவுள்ளது இவற்றை தடைசெய்வதற்கு அரசு முன்வர வேண்டும்.

எமது பெளத்த கலாசாரம் கொண்ட நாட்டினை ஐரோப்பிய இனத்தவர்கள் சுமார் 500 வருடங்கள் தமது ஆட்சிக்குட்படுத்திய போதும் கண்டி இராச்சிய காலத்திலே கண்டி அரசனால் சிறைப்பிடிக்கப்பட்ட றொபட் நொக்ஸ் என்பவர் சிறையிலிருந்து கொண்டே இலங்கையின் வரலாறு என்ற நூலை எழுதினார்.

அதிலே கண்டியிலிருந்து திருகோணமலை வரையிலான பகுதியிலே 96 சிங்கள கிராமங்கள் இருந்ததாக எழுதி உள்ளார். அவைகள் இன்று எங்கே அக்கிராமங்களுக்கு என்ன நடந்தது.

பொதுபலசேனா அமைப்பு கிழக்கிற்கு வரவுள்ளது என்ற செய்தி கேட்டு அக்கரைப்பற்று, சம்மாந்துறை, கல்முனை, காத்தான்குடி, ஏறாவூர் போன்ற பிரதேசங்களில் முஸ்லிம்கள் ஹர்த்தால் செய்தனர் இன்று நடைபெறும் மாநாட்டைக் கூட அம்பாறையில் நடத்தக் கூடாது என்று ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் எழுதி நேரில் சென்று கொடுத்துள்ளார்கள்.

ஆனால் இந்த அமைப்பு ஒரு போது இனங்களுக்கிடையே முறுகல் நிலை ஏற்படுத்தும் அமைப்பாக செயற்படமாட்டாது.

நேற்று முன்தினம் கூட காலி, பலப்பிட்டிய பிரதேச கடல் கொந்தளிப்பினால் காணாமல் போன மீனவர்களை தேடி மீட்கும் பணியை செய்தவர்கள் முஸ்லிம்களே.

அண்மையில் அக்கரைப்பற்று திருக்கோவில் பிரதேசத்தில் மூன்று மதஸ்தலங்கள் டோஷர் கொண்டு தரைமட்டமாக்கப்பட்டன.இவற்றைப் பற்றி பல இடங்களில் கூறியும் எமக்குப் பலன் கிடைக்கவில்லை ஆட்சியாளர்கள் கண் திறந்து பார்க்க வேண்டும் என தெரிவித்தார். (LS)

Published by

Leave a comment