மட்டக்களப்பு: செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பிரபலமான டியூசன் நிலையங்களுக்கு பிரதேச சிறுவர் பாதுகாப்பு பிரிவினரினால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட டியூசன் நிலையங்களின் பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வினை மேற்கொண்ட செங்கலடி பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு பிரிவினர் செங்கலடியில் இயங்கிவந்த பல டியூசன் நிலையங்களுக்கு இடைக்காலத் தடைவிதித்துள்ளனர்.
செங்கலடி அமரா கல்லூரி, பிரைட் டியூசன் சென்றர் உள்ளிட்ட பல டியூசன் நிலையங்களுக்கே வகுப்புக்களை நடத்துவதற்கான இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அண்மையில் செங்கலடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சிறுவர் பாதுகாப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறுவர் பாதுகாப்புக் குழு கூட்டத்தில் பாதுகாப்பு மற்றும் மலசலகூடவசதிகள், குடிநீர்வசதிகள், சுகாதாரவசதிகள், சுற்றுவேலி, ஒழுக்கம் போன்ற பல்வேறு குறைபாடு காரணமாக பல டியூசன் நிலையங்களுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறிய சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மேற்படி குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டதும் மீண்டும் அந்த டியூசன் நிலையங்கள் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுமெனத் தெரிவித்தனர்.
இது தவிர ஞாயிறு தினங்களில் செங்கலடி பிரதேசத்தில் டியூசன் வகுப்புக்களை நடத்துவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த நடைமுறைகளைப் பின்பற்றத் தவறும் டியூசன் நிலையங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தனர்.
Leave a comment