மட்டக்களப்பு: வாழைச்சேனை பொலிஸ் பிரிவிட்குட்பட்ட ஓட்டமாவடி ஜும்ஆ பள்ளிவாயலுக்கு முன்பாக அமைந்துள்ள சிராஜிய்யா அரபுக்கல்லூரிக்கு இன்று வியாழக்கிழமை அதிகாலை 03.30 மணியளவில் இனந்தெரியாத குழுவொன்றினால் தீ வைக்கப்பட்டுள்ளது.
இதனால் அரபுக்கல்லூரியின் மேல் மாடியில் அமைந்துள்ள அதிபர் அலுவலகம், மாணவர்களின் படுக்கறை விடுதி, விடுதியிலுள்ள பொருட்கள், மாணவர்களின் ஆடைகள், கணனிகள் உள்ளிட்ட சுமார் 6 இலட்சம் ரூபா பெறுமதிமிக்க உடமைகள், பொருட்கள் தீயில் கருகி சேதமாகியுள்ளதாக சிராஜிய்யா அரபுக்கல்லூரியின் பிரதி அதிபர் யூ.ஏ.மஜீத் (சிறாஜி) தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
” விடுதியில் தங்கி கற்றல்களை மேற்கொண்டு வந்த மாணவர்களுக்கு கடந்த 29.05.2013ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியே குறித்த தீ வைக்கப்பட்டுள்ளமையால் எவ்வித உயிர்ச் சேதமும் இடம்பெறவில்லை” எனவும் அவர் தெரிவித்தார்.
சம்பவம் இடம்பெற்ற போது தான் கல்லூரியில் இருக்கவில்லை எனவும் அதிகாலை 4 மணியளவில் எனக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து தான் ஸ்தலத்திற்குச் சென்று அங்கு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரின் உதவியுடனும் பொதுமக்களின் உதவியுடனும் தீ மேலும் பரவாமல் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் யார் மீதும் சந்தேகமில்லை எனவும் இது தொடர்பில் வாழைச்சேனைப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் இரண்டு பெற்றோல் போத்தல்கள் காணப்படுவதுடன் பெற்றோலினாலேயே குறித்த விடுதியை இனந்தெரியாதவர்கள் எரித்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த தீ விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
![480725_101980293307646_840716050_n[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/06/480725_101980293307646_840716050_n1.jpg?w=630&h=473)
![480725_101980293307646_840716050_n[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/06/480725_101980293307646_840716050_n1.jpg?w=150&h=112)
Leave a comment