யாழ்ப்பாணம்: யாழ்.விஜயம் செய்துள்ள இந்திய தூதுக்குழுவினரை மதகுருமார்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள், உள்ளிட்டோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழ்ப்பாணம் ரில்கோ விடுதியில் மேற்படி கலந்துரையாடல் இன்றைய தினம் (05) இடம்பெற்றது.
இதன்போது இந்திய தூதுக்குழுவினர் மேற்படி பிரதிநிதிகளிடம் தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டனர்.
இதனிடையே இந்திய அரசினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பிலும், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய திட்டங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தினர்.
இதன்போது அங்கு கருத்துத் தெரிவித்த இந்திய ராஜ் சபையின் பிரதி தலைவர் ரவிசங்கர் பிரசாத் இந்தியா எப்போதும் இலங்கையின் உற்ற நண்பனாக இருக்கும் என்பதுடன், மக்களது பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் நாம் தெளிவாக விளங்கிக் கொண்டோம் என்றும் தெரிவித்தார்.
அத்துடன், வடபகுதி கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் அதுகுறித்து இந்தியா முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் எமக்கு தெளிவுபடுத்தப்பட்ட அதேவேளை இப்பகுதியின் அபிவிருத்தியில் இந்திய அரசு முன்னெடுத்து வருகின்ற செயற்திட்டங்கள் தொடர்பாகவும் நாம் தெளிவாக அறிந்து கொண்டோம். இதனிடையே குறித்த விடயங்கள் மட்டுமல்லாது ஏனைய பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் நாம் அறிந்து கொண்டுள்ளோம் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை, சந்திப்பின் நிறைவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இந்திய ராஜ் சபையின் பிரதி தலைவர் ரவிசங்கர் பிரசாத் நினைவு பரிசொன்றை வழங்கி வைத்தார்.

Leave a comment