மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் ரொபின்சொன் அம்மையார் உடனான சந்திப்பு ஒன்று பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை பகல் நடைபெற்றது.
இச்சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் மக்களின் தேவைகள் குறித்தும் மட்டக்களப்பு மாவட்ட நிலைமைகள் குறித்தும் தூதுவரிடம் எடுத்துரைத்தார்.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பாதுகாப்பு நிலை குறித்து பாராளுமன்ற உறுப்பினருடன் கலந்துரையாடல் மற்றும் புத்தர் சிலை நகர வாயிலில் வைக்கப்படும் விடயம் சார்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் ஏற்படுத்தப்பட்டுள்ள விமானப்படை வீடமைப்பு விடயம், வவுணதீவு பிரதேசத்தில் 25000 ஏக்கர் காணி ஊர்காவல் படையினருக்கு விவசாயத்துக்கு வழங்கப்பட்டமை உட்படவும், வாகரை கடற்பகுதியில் வெளிமாவட்டத்தினரின் அட்டை பிடிப்பால் ஏற்படும் தீமைகள் பற்றியும், மக்கள் அன்றாட சிறு சுயதொழில் நடவடிக்கையில் ஏற்படுத்தப்படும் இராணுவ தலையீடுகள் பற்றியும் பாராளுமன்ற உறுப்பினர் தெளிவாக தூதுவரிடம் விளக்கினார்.
அத்தோடு இரு தினங்களுக்கு முன் ஆலயங்களில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் யுத்தத்தின் பின்பே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதையும் சுட்டிக்காட்டினார்.
மேலும் கோறளைப்பற்று பிரதேசத்தையும், கோறளைப்பற்று தெற்கு பிரதேசத்தையும் பிரிக்கும் கிண்ணையடி முருக்கன்தீவு ஆகிய பகுதிகளை பிரிப்பதுமான ஆற்றுக்கு பாலம் இடுதல் சம்பந்தமாகவும் தூதுவரிடன் பேசப்பட்டது.
இவர் இதற்கு தமக்கு ஒரு மடலை வழங்கி இதன் பிரதிகளை அரசாங்க அதிபர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை தலைமை காரியாலயத்துக்கும் அனுப்புமாறு கோரினார்.
அத்தோடு வாழைச்சேனை தேசிய கடதாசி கம்பனிக்கு உதவிகள் வழங்கி இத்தொழிற்சாலையை கட்டி எழுப்ப வேண்டிய அவசியம் பற்றியும் தூதுவரிடம் கோரப்பட்டது.
மேலும் பல விடயங்கள் சார்பாக பாராளுமன்ற உறுப்பினருக்கும் தூதுவருக்கும் இடையில் பேச்சுக்கள் இடம்பெற்றன.



Leave a comment