வர்த்தக நிறுவனங்களாக மாறும் தனியார் வைத்தியசாலைகள்

Hospital1[1]கொழும்பு: தனியார் ஆஸ்பத்திரிகள் இன்று நோயாளிகளிடமிருந்து நியாயமற்ற முறையில் பணத்தைப் பறிக்கும் வர்த்தக நிறுவனங்களாக மாறிவருகின்றன. நாரஹேன்பிட்டியவிலுள்ள தேசிய இரத்த நிலையம் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு ஒரு அலகு அல்லது ஒரு பக்கெட் இரத்தத்தை 1,100 ரூபாவுக்கு மாத்திரமே விற்பனை செய்கின்றது.

ஆயினும் தனியார் ஆஸ்பத்திரிகள் அந்தப் பக்கெட் இரத்தத்தை நோயாளிகளுக்கு 20 ஆயிரம் ரூபாவுக்கும், வேறு சில தனியார் ஆஸ்பத்திரிகள் 30 ஆயிரம் ரூபாவுக்கும் விற்பனை செய்து ஒரு பக்கெட்டில் மாத்திரம் 18 ஆயிரம் ரூபா முதல் 28 ஆயிரம் வரை கொள்ளை இலாபம் திரட்டுவதாக அங்கு சென்று சிகிச்சை பெறும் நோயாளிகள் அங்கலாய்க்கிறார்கள்.

அது போன்று தனியார் ஆஸ்பத்திரிகளில் சத்திரசிகிச்சை, மருத்துவ சிகிச்சை பிரசவம், போன்ற அனைத்துக்கும் ஆயிரக்கணக்கில் பணத்தை நோயாளிகளிடமிருந்து அறவிடுகின்றன.

அரசாங்க ஆஸ்பத்திரிகளை விட தனியார் ஆஸ்பத்திரிகளில் சிறந்த பராமரிப்பும் வைத்திய சிகிச்சையும் இருப்பதனால் அரசாங்க ஆஸ்பத்திரிகளில் தங்கியிருந்து நோயைக் குணமாக்குவதற்கு முடியாத நிலையில் உள்ள செல்வந்தர்கள் மட்டுமின்றி சராசரி வருமானம் பெறுபவர்கள் கூட தனியார் ஆஸ்பத்திரிகளை தங்கள் நோயைக் குணமாக்குவதற்கு நாடிச் செல்கின்றனர். இதற்கென அவர்கள் கைவசம் இருக்கும் பணத்தை செலவிட்ட பின்னர் மேலதிகமாக கடன் பட்டு தனியார் ஆஸ்பத்திரிகளுக்கான கட்டணங்களை செலுத்த வேண்டியுள்ளது.

இது பற்றி சுகாதார அமைச்சின் அதிகாரியொருவருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது தனியார் ஆஸ்பத்திரிகளை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று கூறினார்.

அவரது கூற்று உண்மையாகவிருந்தால் அரசாங்கம் ஏன் ஒரு சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி தனியார் ஆஸ்பத்திரிகளை கண்காணிப்பதற்கான ஒரு அமைப்பை ஏற்படுத்த முடியாது என்று இந்த ஆஸ்பத்திரிகளுக்குச் சென்று சிகிச்சை பெறுபவர்கள் வினா எழுப்புகிறார்கள்.

நம் நாட்டு மக்களை நோயிலிருந்து காப்பாற்றி உடல் நலத்துடன் வாழ்வதற்கு வழி வகுக்கும் முகமாகவே அரசாங்கம் இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னரும் சுதந்திரம் பெற்ற பின்னரும் அரசாங்க ஆஸ்பத்திரிகளை ஏற்படுத்தின.

1960ஆம் தசாப்தம் வரை எமது அரசாங்க ஆஸ்பத்திரிகள் சுகாதாரத் திற்கேற்புடைய வகையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியை சிறப்பாக நிறைவேற்றின.

ஆயினும் காலப்போக்கில் அரசாங்கத்தை எதிர்நோக்கியிருந்த பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக ஆஸ்பத்திரி களுக்கு அரசாங்கம் வழமையாக ஒதுக்கிய நிதி குறைக்கப்பட்டது.

அதனால் நான்கு நாளைக்கு ஒரு தடவை நோயாளிகளின் கட்டில் விரிப் புகள் மற்றும் தலையணை உறைகள் சலவை செய்யும் முறை கைவிடப் பட்டு அவை இரண்டு மூன்று வாரங்களுக்கு நோயாளிகள் மாறினாலும் அவை மாற் றப்படாத நிலையில் இருக்கும். இதனால் நோயைக் குணப்படுத்துவதற்கு அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கு வரும் நோயாளிகளில் சிலருக்கு வேறு நோய்களும் தொற்றுவதுண்டு.

இத்தகைய சூழ்நிலையில் அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கு சென்று அசெளகரியமான நிலையில் சிகிச்சை பெற விரும்பாதவர்ககளுக்கு சிகிச்சை பெற உதவும் முகமாக அரசாங்கங்கள் தனியார் ஆஸ்பத்திரிகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி அளித்தது.

இதன் அடிப்படையில் 1920ஆம் ஆண்டு தசாப்தத்தில் யூனியன் பிளேஸில் முதல் தடவையாக ஒரு தனியார் ஆஸ்பத்திரி ரத்னம் ஆஸ்பத்திரி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. அதையடுத்து டாக்டர் எம். சி. எம். கலீல் தனியார் ஆஸ்பத்திரி மருதானையில் ஆரம்பிக்கப்பட்டது. சில காலத்துக்குப் பின்னர் கொழும்பு கிராண்ட்பாஸில் சுலைமான் ஆஸ்பத்திரி ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் நாடெங்கிலும் சிறிய தனியார் ஆஸ்பத்திரிகள் ஆரம்பிக்கப்பட்டன. அன்றைய காலகட்டத்தில் இந்த தனியார் ஆஸ்பத்திரிகள் நியாயமான கட்டணத்தையே அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளிடமிருந்து அறவிட்ட போதும் அவர்களுக்கு சிறந்த வசதிகளுடன் வைத்திய சிகிச்சையைக்கொடுத்து நோய்கள் குணமாக்கப்பட்டன.

1977ஆம் ஆண்டில் ஜே. ஆர். ஜயவர்தனவின் ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன் அன்றைய அரசாங்கத் தலைவரான ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன கட்டுப்பாடற்ற பொருளாதாரக் கொள்கையை இலங்கையில் முதல் தடவையாக அமுலாக்கி சகலவித வர்த்தக முயற்சிகளுக்கும் வரிச்சலுகையைப் பெற்றுக்கொடுத்தார்.

இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி பல செல்வந்தர்கள் பாரிய அடிப்படையில் தனியார் ஆஸ்பத்திரிகளை நாடெங்கிலும் குறிப்பாக கொழும்பு மாநகரத்திலும் ஆரம்பித்தனர். இந்த ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளின் புறம்பான அறைகளின் தொலைக்காட்சிப் பெட்டிகள், தொலைபேசி வசதி, மற்றும் குளிரூட்டும் வசதி அனைத்தும் பெற்றுக் கொடுக்கப்பட்டதனால் ஓர் அறைக்கு 8 முதல் 10 ஆயிரம் ரூபா வரை நாளொன்றுக்கு கட்டணமாக பெறப்பட்டது. அத்துடன் மருந்து, சத்திரசிகிச்சை வசதிகளுக்கும் பெருமளவு பணம் கட்டணமாக அறவிடப்பட்டது. இதனால் ஒரு நோயாளி சத்திரசிகிச்சை செய்ய வேண்டுமாயின் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் கூடுதலான பணத்தைச் செலவிட வேண்டியிருக்கிறது. இருதய சத்திரசிகிச்சை செய்பவர்கள் 5 முதல் 6 இலட்சம் ரூபாவரை செலவிட வேண்டியிருக்கிறது.

– தினகரன்

Published by

Leave a comment