
கல்முனை: கல்முனை நகரையும் நாவிதன்வெளி பெரு நிலப்பரப்பையும் இணைக்கும் கிட்டங்கி பாலம் நீண்ட காலத்திற்குப் பின்னர் புனரமைக்கப்பட்டு வருகின்றது.இதன் நிர்மாண வேலைகள் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது விரைவில் மக்கள் பாவனைக்கு திறந்து விடப்படும் என அறிவிக்கப்படுகிறது.
பெரும்பாலும் எதிர்வரும் 5 ஆம் திகதி இந்நிர்மான வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டு மக்களின் போக்குவரத்திற்காக திறந்து விடப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதேவேளை இப்பால நிர்மாண வேலைகள் முடிவுற்றதும் கல்முனை தொடக்கம் கிட்டங்கி வரையிலான பிரதான வீதியின் இரண்டாம் கட்ட விஸ்தரிப்பு பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
கல்முனை தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹும் எம். ஸி. அஹமது 1975 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இக்கிட்டங்கிப் பாதையை உருவாக்கி நாவிதன்வெளி மற்றும் கொலனிப் பகுதிகளில் வாழ்கின்ற மக்களின் போக்குவரத்திற்கு வழியேற்படுத்தினார்.
எனினும் 1990 இற்கு பிற்பட்ட காலத்தில் மழை, வெள்ளம் காரணமாக காலத்திற்கு காலம் பாதிக்கப்பட்டு சிதைவடைந்து போக்குவரத்திற்கு அறவே உதவாத வீதியாக இப்பாதை காணப்பட்ட போதிலும் அம்பாறை மாவட்டத்தில் பல அமைச்சர்கள், எம். பி. க்கள் பதவி வகித்து வந்தும் கூட இதனைப் புனரமைப்பு செய்வதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.
அதேவேளை 2006 – 2010 காலப் பகுதியில் பிரதி அமைச்சராக பதவி வகித்த மயோன் முஸ்தபா தனது மாமனார் எம். சி. அஹமதினால் உருவாக்கப்பட்ட கிட்டங்கிப் பாதை விடயத்தில் கூடிய கரிசனை எடுத்து கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டதன் பயனாக 2009 பிற்பகுதியில் கிட்டங்கி பால நிர்மாணத்திற்காக அப்போதைய நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபிள்ளை நிதியோதுக்கீட்டை மேற்கொண்டதுடன் அதற்கான தளபாடங்கள் மற்றும் உபகரணங்களும் இங்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
எனினும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபிள்ளை குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டது மட்டுமல்லாமல் மயோன் முஸ்தபா 2010 ஜனவரி மாதம் தனது பிரதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து அரசில் இருந்து வெளியேறியதனால் கிட்டங்கிப் பால நிர்மாண வேலைத் திட்டம் கால தமதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment