– பழுலுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி: காத்தான்குடி நகர சபையில் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்தக்கோரி காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் (சுயேட்சைக்குழு-01) பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகளின் ஏற்பாட்டில் ‘ஒரு மணி நேர கவன ஈர்ப்புப் போராட்டம்’ வியாழக்கிழமை காலை8மணி முதல் 9 மணிவரை மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திற்கு முன்னால் இடம்பெற்றது.
இதே வேளை காத்தான்குடி நகர சபைக்கு வழமை போன்று வருகை தந்த காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் கவன ஈர்ப்புப் போராட்டம் இடம்பெற்ற இடத்தில் இறங்கி கவன ஈர்ப்புப் போராட்டத்தை முடித்து விட்டு செல்வதற்கு தயாரான நல்லாட்சிக்கான மக்கள் இயக்க உறுப்பினர்களிடம், நீங்கள் எங்கே செல்கிறீர்கள் என்று வினவியதாகவும் அதற்கு நாங்கள் போய்விட்டு வருகின்றோம் என்று தெரிவித்தபோது அதற்கு நகர சபைத் தவிசாளர் ‘நீங்கள் இருந்து உங்கள் பிரச்சினையை முடித்து விட்டு செல்லுங்கள்’ என்றும் ‘நான் உங்களுக்கு சாப்பாடு வாங்கித் தருகிறேன்’ என்றும் தெரிவித்தாக தெரிவிக்கப்படுகின்றது.
‘பள்ளிவாயல்கள் சொத்துக்களை ஆக்கிரமிப்பதை நிறுத்துக’ ‘அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் இடம்பெறுகின்ற நிதி நடவடிக்கைகளில் இடம்பெறுகின்ற மோசடிகளை நிறுத்துக’, ‘நகரசபை அமர்வுகளில் ஊடகவியலாளர்களையும் அனுமதிக்குக”நகரசபை நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை பேணுக”நகரசபையின் கேள்விச்சபை மற்றும் நிலையியற்க் குழுவின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துக’ ‘நகரசபையில் தீர்மானம் எடுக்கப்படாத நடவடிக்கைளை தன்னிச்சையாக மேற்கொள்ளப்படுவதை நிறுத்துக’ ‘நகரசபைச் செயலாளரே! சட்டத்தின் வழியில் நகரசபையை வழிநடாத்துக’ உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தே இந்த கவன ஈர்ப்புப் போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



Leave a comment