காத்தான்குடி: இலங்கையிலிருந்து ஏற்கனவே ஹஜ்ஜுக்கு சென்ற ஒருவர் பத்து வருடங்களுக்கு பின்பே அவர் மீண்டும் ஹஜ்ஜுக்கு செல்ல முடியுமென முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எச்.எம். சமீல் நளீமி தெரிவித்தார்.
இவ்வாண்டு புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்லவுள்ள ஹஜ்ஜாஜிகளுக்கான கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற் கண்டவாறு குறிப்பிட்டார்.
அண்மையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எச்.எம். சமீல் நளீமி, ஹஜ் கோட்டாவை கருத்திற்கொண்டு இலங்கையிலிருந்து பத்து வருடங்களுக்கு ஒருமுறை மாத்திரமே ஒருவர் ஹஜ்ஜுக்கு செல்ல முடியும் என்பதை முஸ்லிம் சமய பண்பாட்ட லுவல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதேபோன்று பதில் ஹஜ்ஜுக்காகவும் செல்ல முடியாது. இம்முறை இலங்கையிலிருந்து ஹஜ்ஜுக்கு செல்வதற்காக 7800 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் எமது இலங்கைக்கு சவூதி அரேபியா அரசாங்கம் 2800 பேருக்கு மாத்திரமே இவ்வாண்டு ஹஜ்ஜுக்கு செல்வதற்கான கோட்டா வழங்கப்பட்டுள்ளது.
இதை மையப்படுத்தி சில நடைமுறைகளை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பின்பற்ற தீர்மானித்துள்ளது. அதில் இவ்வாண்டு ஹஜ்ஜுக்கு செல்ல விண்ணப்பித்தவர்களில் புதிதாக செல்பவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குதல், அதேபோன்று முதியவர்களுக்கு முன்னுரிமையளித்தல் போன்ற நடைமுறைகளையும் எமது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடைமுறைப்படுத்தவுள்ளது. கடந்த வருடம் ஹஜ்ஜுக்காக செல்வதற்கு விண்ணப்பித்து வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கும் இம்முறை சந்தர்ப்பம் வழங்கப்படல் வேண்டும்.
பெண் ஒருவருடன் மஹரமாக (திருணம் செய்ய அனுமதிக்கப்படாதவர்) செல்லும் ஆண் ஏற்கெனவே சென்றிருந்தாலும் அவர் குறித்து ஆராய்ந்து அனுமதி வழங்கப்படும்.
இம்முறை ஹஜ் பிரயாணம் மேற்கொள்ளவுள்ளவர்களுக்கான கட்டணம் பற்றி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. கடந்த வருடம் சில முகவர்கள் கூடிய பணங்களை பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் சகல முகவர்களையும் வைத்து கலந்துரையாடலை மேற்கொண்டு இதற்கான கட்டணம் தீர்மானிக்கப்படும். சில முகவர்கள் அவர்கள் ஹாஜிகளுக்கு வழங்கும் விசேட தேவைகளை கருத்திற்கொண்டும் கட்டணங்கள் அறவிடுவர். ஏதும் பிரச்சினைகள் இருப்பின் அவைகள் தொடர்பில் எமக்கு அறிவித்தால் அவற்றை நாங்கள் கவனத்தில் கொள்வோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதில் முஸ்லிம் சமய பண்பாட் டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் அஷ்ஷெய்க் எம். ஜுனைத் நளீமி உட்பட திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் ஹஜ் முகவர்கள் கலந்து கொண்டனர்.
– தினகரன்
Leave a comment