சென்னை: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சீனிவாசன் பெரும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் மீது தமிழக அரசின் நடவடிக்கை பாயுமா என்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தமிழக அரசிடம் இருப்பதால் இந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதாவது முதல்வர் ஜெயலலிதா நினைத்தால் இந்திய கிரிக்கெட் வாரியத்தையே அரசின் வசம் கொண்டு வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. The Board of Control for Cricket in India. இதுதான் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முழுப் பெயர். இதன் தலைமையகம் மும்பையில் உள்ளது. 1928ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வாரியம் உருவாக்கப்பட்டது. அதுவரை இந்தியாவில் ‘கல்கத்தா கிரிக்கெட் கிளப்’ என்ற பெயரில்தான் கிரிக்கெட் வாரியம் இயங்கி வந்தது.
1928ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் உருவாக்கப்பட்டபோது, அது, தமிழ்நாடு சங்க பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்து. அதாவது தமிழகத்தில்தான் இந்திய கிரிக்கெட் வாரியமே பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது சுயேச்சையான தனியார் அமைப்பாக பெரும் பணக்கார அமைப்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் திகழ்கிறது. இருப்பினும் தமிழக அரசின் சட்டத்தின் கீழ் இது பதிவு செய்யப்பட்டிருப்பதால் தற்போது பெரும் சிக்கலுக்குள் மாட்டும் அபாயத்தின் கீழ் அது தள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சங்க பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு அமைப்பு சரியாக செயல்படாவிட்டால் அல்லது அதன் இயக்குர்கள் குழுவில் பிரச்சினை ஏற்பட்டால், அல்லது வேறு ஏதாவது நிர்வாகக் கோளாறு, நிதி மோசடி உள்ளிட்ட புகார்கள் கிளம்பினால், அந்த அமைப்பின் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க முடியும். ஏன் தமிழக அரசு நினைத்தால் வாரிய இயக்குநர்கள் குழுவை கலைத்து விட்டு தனியாக ஒரு சிறப்பு அதிகாரியைப் போட்டு நிர்வாகத்தையே தன் வசம் எடுத்துக் கொள்ள முடியும். இது இந்திய கிரிக்கெட்வாரியத்திற்கும் முழுமையாக பொருந்தும்.
இப்படி ஒரு நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க முடிவு செய்தால், சட்டப்படி அதை யாரும் தடுக்கவும் முடியாது. தற்போது ஐபிஎல் ஸ்பொட் பிக்ஸிங் விவகாரத்தில் சிக்கி இந்திய கிரிக்கெட் வாரியம் தத்தளிக்கிறது. அதன் தலைவர் சீனிவாசனுக்கு எதிராக போர்ட் உறுப்பினர்கள் ஒவ்வொருவராக கிளம்பத் தொடங்கியுள்ளனர். நிர்வாகிகளான காங்கிரஸின் ராஜீவ் சுக்லா மற்றும் பாஜகவின் அருண் ஜேட்லி ஆகியோர் சீனிவாசன் தற்காலிகமாக விலக வேண்டும் என்று குரல் கொடுத்தனர். பரூக் அப்துல்லா சீனிவாசனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதனால் போர்டுக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது.சூதாட்டப் புகார்களும் பெருமளவில் குவிந்து வருகின்றனர். சென்னையில் வைத்து பல புக்கிகள் கைதாகியுள்ளனர். உச்சகட்டமாக சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனும் கைதாகியுள்ளார். இதனால் இந்திய கிரிக்கெட் வாரியம் பெரும் சிக்கலில் மாட்டியுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு தலையிட்டு வாரிய போர்டை கலைத்து விட்டு தன் வசப்படுத்தி சிறப்பு அதிகாரியை நியமித்து வாரியத்தை தன் வசப்படுத்த முழுமையான வாய்ப்புகள் இருப்பதாக பரபரப்பாக பேசப்படுகிறது.முதல்வர் ஜெயலலிதா நினைத்தால் அவர் மனது வைத்தால், அவர் முடிவு செய்து விட்டால் எந்த நொடியிலும், இந்திய கிரிக்கெட் வாரியத்தை தமிழக அரசின்வசம் கொண்டு வர முடியும் என்பதால் பெரும் பரபரப்பும் கிளம்பியுள்ளது.
மேலும் சீனிவாசன் உள்ளிட்டோர் மீது அவர் விசாரணையையும் அறிவிக்க முடியும்.இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு கூறுகையில், தமிழ்நாடு சங்க பதிவு சட்டத்தின் கீழ், சம்பந்தப்பட்ட அமைப்பின் போர்ட் உறுப்பினர்களை நீக்கி விட்டு தனி அதிகாரியை நியமித்து நிர்வாகத்தை தன் வசம் கொ்ண்டு வர தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. அதில் யாரும் தலையிட முடியாது. மேலும் இந்த வாரியத்தையும் கலைத்து உத்தரவிடவும் முடியும்.
மேலும் அரசிடம் யாராவது இந்த வாரியத்தின் நிர்வாகம் குறித்து புகார் கொடுத்தால் அதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடவும் மாநில அரசுக்கு முழுமையான அதிகாரம் உள்ளது. புகார் வர வேண்டும் என்று கூட இல்லை, தானாகவே கூட அரசு விசாரணைக்கு உத்தரவிட முடியும் என்றார். இதனால் சீனிவாசனுக்கு தமிழக அரசும் தன் பங்குக்கு பெரும் நெருக்கடியைத் தர நிறையவே வாய்ப்புகள் உள்ளது. மேலும், சீனிவாசன், திமுக தரப்புக்கு மிகவும் நெருக்கமானவர் என்ற பேச்சும் ஏற்கனவே உள்ளது. எனவே சீனிவாசனுக்கு தமிழக அரசு நெருக்கடி தருமா என்ற பெரும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

![bcci[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/05/bcci1.jpg?w=630&h=221)
Leave a comment