கொழும்பு: ஜோர்தானில் துப்பாக்கிச் சூட்டில் பலியான இலங்கைப் பணிப் பெண்ணின் மரணம் தொடர்பாக விசாரனை நடாத்தி நீதி வழங்க வேண்டும் என்று மட்டக்களப்பு வாழைச்சேனையில் பேரணியொன்று நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 6ம் திகதி ஜோர்தானில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 21 வயதான நாகேந்திரன் காந்திமதியின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை விமானம் மூலம் இலங்கை கொண்டுவரப்பட்டு, இன்று திங்கட்கிழமை அவரது சொந்தக் கிராமமான கறுவாக்கேணியில் அடக்கம் செய்யப்பட்டது.
அந்தப் பெண் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாக கூறப்படுவதில் சந்தேகம் இருப்பதாக அவரது தாயார் மங்களேஸ்வரி கூறுகிறார்.
மர்மமான முறையில் அந்தப் பெண் உயிரிழந்துள்ளமை தொடர்பில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று கோரி அவரது கிராம மக்களும் உறவினர்களும் பேரணியாக சென்று பிரதேச செயலாளரிடம் மனுவொன்றைக் கையளித்துள்ளனர்.
ஜோர்தானிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு இந்த அனுப்பிவைக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமைச்சருக்கும் கடிதம்
தனது மகள் எவ்வாறு சுடப்பட்டார், அதன் பின்னணி என்ன என்பது பற்றி அறியத் தராமல் சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தாய் கூறுகிறார்.
தனது மகளின் மரணத்திறகு காரணமானவர்கள் கண்டு பிடிக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டு அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு அவர் வலியுறுத்தி கேட்டுள்ளார்.
வீட்டு எஜமானாலும் அவரது மகனாலும் தனது மகள் தொடர்ச்சியாக கொடுமைபடுத்தப்பட்டு வந்துள்ளதாக அவர் ஏற்கனவே கூறியிருந்தார்.
இதேவேளை, ஜோர்தானிலுள்ள இலங்கை தூதரகம் ஊடாக விசாரனை நடாத்தி உண்மை கண்டறியப்பட்டு உரியவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டிலான் பெரேராவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
உயிரிழந்த பணிப் பெண்ணின் நெஞ்சில் துப்பாக்கி குண்டு பாய்ந்து குருதி வெளியேறியுள்ளதாக உறவினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் மூலம் அறிய முடிவதாக அமைச்சருக்கு அனுப்பி அவைத்துள்ள அவசர கடிதமொன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் குடும்ப பொருளாதாரத்தை கவனத்தில் எடுத்து இழப்பீடு வழங்க வேண்டும் என்றும்அக் கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
-BBC

Leave a comment