லண்டன்: லண்டன் வீதியில் பிரிட்டிஷ் படை வீரர் லீ ரெகி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர் பிரிட்டனில் வாழும் முஸ்லிம் சமூகங்களிடையே அச்ச உணர்வு அதிகரித்திருப்பதாக மத நல்லிணக்கத்துக்கான அமைப்பொன்று கூறியுள்ளது.
கொல்லப்பட்ட படைவீரரின் வயது 25. திருமணமானவர். ஆங்கிலேயே கலாச்சாரத்தில் இளவயது திருமணம் என்பது விரல்விட்டு எண்ணக்கூடிய வகையிலேயே அமைகின்றன. இருந்தும் தனது இளம் வயதில் 2007 ஒக்டோபர் மாதம் ரெபேக்கா மெட்கல்பே எனும் பெண்ணை திருமணம் செய்தார்.

கடந்த புதன்கிழமை குறித்த படை வீரர் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர், பிரிட்டனில் முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் மோசமாக அதிகரித்துள்ளதாக பெய்த் மெட்டர்ஸ் என்ற இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இரண்டு நாட்களில் மட்டும் முஸ்லிம்களுக்கு எதிரான 162 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் தொடங்கி துவேஷ வார்த்தைப் பிரயோகங்களும், முஸ்லிம் பெண்களின் முக்காடு அங்கிகளை பிடித்து இழுத்தல் போன்ற சம்பவங்களும் இவற்றில் அடங்குகின்றன. சமூக-இணையதளங்களில் இனத்துவேஷ வார்த்தைப் பிரயோகங்களை வெளிப்படுத்திய பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மதநல்லிணக்கத்தை வெளிக்காட்டும் முகமாக முஸ்லிம் அமைப்புக்களின் தலைவர்களும், அங்கத்துவர்களும் கொல்லப்பட்ட படை வீரரின் நினைவு இடத்திற்கு மலர்வலயங்களை அளித்து அவருக்கான மரியாதையை செய்து வருகின்றனர.
இக்கொலை விடயமாக முஸ்லிம் அமைப்புக்களின் தலைவர்கள் கண்டன அறிக்கையை அரசாங்கத்திடம் வழங்கி இருப்பதுடன், தனது ஆழ்ந்த அனுதாபங்களை கொல்லப்பட்ட படைவீரரின் குடும்பத்திற்குத் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் லண்டன் மேயர் பொரிஸ் ஜொன்ஸன், முஸ்லிம்களை இவ்விடயத்தில் குற்றஞ்சாட்ட வேண்டாம் என பொதுமக்களைக் கேட்டிருந்தார். பொலிஸாரும் முஸ்லிம்கள் செறிந்துவாழும் நகரங்களிலும், பள்ளிவாயல்கள் மற்றும் சமய கட்டடங்களுக்கு பாதுகாப்பு வழங்கிவருவதும் குறிப்பிடத்தக்கது.


Leave a comment