
பழுளுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி: மட்டக்களப்பு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் ரியல் ஏசியன் விளையாட்டுக் கழகத்தினால் பாடசாலை மாணவிகளுக்கு ‘தற்போழுது சமூகத்தில் கையடக்கத் தொலைபேசியினை மக்கள் அதிகமாக நன்மையான விடயத்திற்கு பயன்படுத்துகிறார்களா? அல்லது தீமையான விடயத்திற்கு பயன்படுத்துகிறார்களா?’ எனும் தலைப்பில் விவாதப்போட்டி ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் காத்தான்குடி அந்நாஸர் வித்தியாலய மண்டபத்தில் ஹிஸ்புல்லாஹ் ரியல் ஏசியன் விளையாட்டுக் கழகத் தலைவர் முஹம்மட் றிஸ்வி தலைமையில் இடம்பெற்றது.
காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலயம், காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற குறித்த விவாதப் போட்டியில் காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலய மாணவிகள் 19புள்ளிகளை பெற்று வெற்றியை தமதாக்கிக் கொண்டனர்.
இவ் விவாதப் போட்டியின் நடுவர்களாக முன்னால் காழி நீதிபதியும், ஒய்வு பெற்ற அதிபருமான மஹ்றூப் கரீம், ஒய்வு பெற்ற ஆசிரியர் முஸ்தபா, ஆசிரியர் ஜுனைத் ஆகியோர் கடமையாற்றினார்கள்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம். எல். ஏ. எம் ஹிஸ்புல்லாஹ், கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பரீட், ஓய்வு பெற்ற ஆசிரியர் முஸ்தபா, ஆசிரியர் ஜுனைத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்டு அனைவருக்கும் சாண்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் வெற்றி பெற்றவர்களுக்கு விசேட பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment