ஹூஸ்டன்: கடந்த 17ம் திகதி நிலாவின் மீது ஒரு பெரிய விண்கல் மோதி பெரும் அளவிலான தூசியைக் கிளப்பியுள்ளது. இதை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாஸாவின் தொலைநோக்கிகள் வீடியோ எடுத்துள்ளன.
இந்த விண்கல் மோதலால் உருவான பெரும் வெளிச்சம் பூமியில் இருந்து பார்ப்பவர்களின் வெறும் கண்களுக்கும் தெரிந்துள்ளது. நிலாவின் Mare Imbrium பள்ளத்தாக்கில் இந்த விண்கல் மோதியபோது உருவான வெளிச்சம் சில வினாடிகள் ஒரு நட்சத்திரத்தைப் போல ஜொலித்துள்ளது.
இந்த மோதல் நிகழ்ந்தபோது 5 டன் டி.என்.டி வெடிமருந்து வெடித்துச் சிதறியதற்கு இணையான சிதைவும் ஆற்றலும் வெளிப்பட்டதாக நாஸாவின் மார்ஷல் ஸ்பேஸ் பிளைட் சென்டரின் விஞ்ஞானி ரான் சுக்ஸ் தெரிவித்துள்ளார்.
இத்தனைக்கும் இந்த விண்கல் 1.5 அடி மட்டுமே அகலம் கொண்டது. 40 கிலோவுக்கும் குறைவான எடை கொண்டதாகும்.
ஆனால், இந்த விண்கல் நிலாவின் மீது மோதியபோது அது மணிக்கு 56,000 மைல்கள் வேகத்தில் அதிபயங்கரமாக பறந்து வந்து மோதியுள்ளதால் தான் இந்த மோதலின்போது பெரும் வெளிச்சம் உருவாகியுள்ளது.
இது போன்ற சிறிய விண்கல் பூமிக்குள் நுழைந்தால் நமது காற்று மண்டலத்தின் உராய்விலேயே உடைந்து சிதறி எரிந்து போய்விடும். ஆனால், நிலாவில் காற்று மண்டலம் இல்லாததால் முழுமையாக வந்து மோதியுள்ளது இந்த விண்கல்.
இந்த மோதலால் Mare Imbrium பள்ளத்தாக்கில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இந்தப் பகுதியின் மீது நாஸாவின் நிலா ஆய்வு செயற்கைக் கோளான Reconnaissance Orbiter விரைவில் பறக்கவுள்ளது. அப்போது தான் இந்த மோதலால் ஏற்பட்ட சேதத்தின் முழு விவரத்தை நாம் அறிய முடியும் என்கிறது நாஸா.




Leave a comment