காத்தான்குடி: காத்தான்குடி கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கால்நடை வைத்திய நடமாடும் சேவை நேற்று செவ்வாய்க்கிழமை காத்தான்குடிப் பிரதேசத்தில் இரு பிரிவுகளில் இடம்பெற்றது.
குறித்த நடமாடும் சேவை காலை 09.00மணி தொடக்கம் 12.30மணிவரை காத்தான்குடி-05 மஸ்ஜிதுல் குபா ஜும்மாப் பள்ளிவாயல் பகுதியில் மஸ்ஜிதுல் குபா ஜும்மாப் பள்ளிவாயல் வளாகத்திலும் மதியம் 12.30மணி தொடக்கம் பிற்பகல் 04.30மணிவரை காத்தான்குடி ஹுஸைனியா பகுதியில் ஹுஸைனியா பாலர் பாடசாலையிலும் இடம்பெற்றது.
காத்தான்குடி கால்நடை வைத்திய அதிகாரி எஸ்.எம்.ஐ.எல். சாகலசூரிய, கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர் வி.கோவேந்திரன்,கால் நடை அபிவிருத்தி காரியாலய உத்தியோகத்தர் சலீம் ஆகியோர் இந்த நடமாடும் சேவையில் கலந்து கொண்டனர்.
இங்கு ஆடு,மாடு,கோழி உட்பட கால்நடை வளர்ப்பவர்களுக்கு இலவச வைத்திய ஆலோசனையும்,இலவச மருந்து விநியோகமும்,புதிய பண்ணையாளர் பதிவு,பண்ணையாளர்களின் வீடுகளுக்குச் சென்று கால்நடைகளை பார்வையிட்டு மருந்து வகைகளை வழங்கல் என பல்வேறு சேவைகள் இடம்பெற்றன.
நேற்று முழுநாளாக இடம்பெற்ற குறித்த நடமாடும் சேவையினூடாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பண்ணையாளர்கள் பயனடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment