
பழுலுல்லாஹ் பர்ஹான்
மட்டக்களப்பு: இலங்கை விமானப் படையின் மட்டக்களப்பு விமானப் படை முகாம் பொறுப்பதிகாரி வின்கெமாண்டர் டப்ளியூ. எம். ஏ. பீ. அஜித் வெவேகம பதவியுயர்வு பெற்று கொழும்புக்கு செல்வதையிட்டு இன நல்லுறவைப் பேணும் முகமாக மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் சகோதரர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாவிடை நிகழ்வு இன்று திங்கட்கிழமை பிற்பகல் அஸர் தொழுகையை தொடர்ந்து மட்டக்களப்பு ஜாமிஉஸ் ஸலாம் ஜூம்மா பள்ளிவாயல் மண்டபத்தில் பள்ளிவாயல் நிர்வாக சபை உப தலைவர் இக்பால் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பள்ளிவாயல் நிர்வாக சபைத் தலைவர் எம். பி. எஸ். முஹம்மட், பள்ளிவாயல் நிர்வாக சபை செயலாளர் ஸாலிஹ், மட்டக்களப்பு ஜாமிஉஸ் ஸலாம் ஜூம்மா பள்ளிவாயல் பேஷ் இமாம் மௌலவி எம். ஐ. எம். நளீம் (பலாஹி), மௌலவி பாஹிம் (பலாஹி) மட்டக்களப்பு விமானப் படை சிவில் தொடர்பாடல் அதிகாரி ஏ. பி. எம். அன்சார், மட்டக்களப்பு மெக்ஸல் ஹாட்வெயார் உரிமையாளர் அஹமட் லெப்பை மீராசாஹிபு, மட்டக்களப்பு பிரதேசத்திலுள்ள முஸ்லிம் வர்த்தகர்கள்,உலமாக்கள், விமானப் படை அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
இதன்போது பதவியேற்று சுமார் இரண்டு வருடகாலம் கடமையாற்றியது மட்டுமல்லாமல் முஸ்லிம் மக்களுடன் சிநேகபூர்வமாக நடந்து கொண்ட மட்டக்களப்பு விமானப் படை முகாம் பொறுப்பதிகாரி வின்கெமாண்டர் டப்ளியூ. எம். ஏ. பீ. அஜித் வெவேகமக்கு ஜாமிஉஸ் ஸலாம் ஜூம்மா பள்ளிவாயல் பேஷ் இமாம் மௌலவி எம்.ஐ.எம்.நளீம்; (பலாஹி) பொன்னாடை போர்த்தி மட்டக்களப்பு ஜாமியுஸ் ஸலாம் பள்ளிவாயல் நிர்வாக சபைத் தலைவர் எம். பி. எஸ். முஹம்மட் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார்.
இங்கு மட்டக்களப்பு விமானப் படை முகாம் பொறுப்பதிகாரி வின்கெமாண்டர் டப்ளியூ. எம். ஏ. பீ. அஜித் வெவேகமவுக்காக மௌலவி மசூத் காஷிமியினால் விசேட துஆப்பிரார்த்தணை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment