பழுளுல்லாஹ் பர்ஹான்
மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 30வருட கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீளகுடியமர்த்தப்பட்டுள்ள கிராமமான மட்டக்களப்பு உறுகாமம் கிராமத்திற்கு 140இலட்சம் ரூபா செலவில் புதிய மின் இணைப்புத் திட்டம் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட தினமான இன்று சனிக்கிழமை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் வைபவ ரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
ஏறாவூர் நகர சபைத் தவிசாளர் அலிஸாஹிர் மௌலானா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பதில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதுடன் விசேட அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்,மட்டக்களப்பு பிராந்திய மின் அத்தியட்சகர், பிரதியமைச்சரின் பிரத்தியேக செயலாளர் முஹம்மட் றுஸ்வின்,பிரதியமைச்சரின் ஊடக இணைப்பாளர் எம்.எஸ்.எம். சஜி, ஊர்த் தலைவர்கள் உட்பட பெருமளவிலான ஆண்கள் பெண்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
யுத்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து பின்னர் மீள குடியமர்த்தப்பட்ட மக்கள் நீண்ட காலமாக மின்சாரமின்றி பல்வேறு கஷ்டங்களுக்கு ஆளாகி வந்தனர். இதனை கருத்திற் கொண்ட பிரதியமைச்சர் அரசாங்கத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கமைவாகவே முதற் தடவையாக குறித்த மீள்குடியேற்ற கிராமத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment