‘மகாசென்’ சூறாவளி வடக்கு நோக்கி நகர்வு: தரையை கடக்க நான்கு நாட்கள் செல்லும்

???????????????????????????????கொழும்பு: திருகோணமலையிலிருந்து 750 கிலோ மீற்றர் தூரத்தில் காணப்படும் ‘மகாசென்’ சூறாவளி வட பகுதியை நோக்கி நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் கடமை நேர வானிலையாளர் பபோதினி கருணாபால நேற்றுத் தெரிவித்தார்.

இச்சூறாவளி நிலத்தை அடைவதற்கு நான்கு நாட்கள் செல்லுமென எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட அவர் அடுத்துவரும் சில தினங்களுக்கு மன்னார் முதல் யாழ்ப்பாணம் ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இச்சூறாவளி பங்களா தேசத்தையே ஊடறுக்கக் கூடியவகையில் மணித்தியலத்திற்கு 20 கிலோ மீற்றர்கள் வேகத்தில் தற்போது நகர்ந்து கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இச்சூறாவளி இலங்கையை ஊடறுக்காவிட்டாலும் நாட்டில் இடையி டையே காற்றின் வேகம் அதிகரிக்கும். அத்தோடு கடும் மழையும் பெய்யும் என்றும் அவர் கூறினார்.

நேற்று காலையுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சிப் பதிவுப்படி ஆகக் கூடிய மழை குக்குலேகங்கையில் 134 மில்லி மீற்றர்கள் பெய்துள்ளது. என்றாலும் அடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்குள் வட மாகாணத்தில் 200 மி. மீ. வரை மழை பெய்யக் கூடிய சூழல் காணப் படுவதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில் இச்சூறாவளி காரணமாக மன்னார் முதல் யாழ்ப்பாணம் ஊடாக மட்டக்களப்பு – அம்பாறை வரையான கடல் கொந்தளிப்பாகக் காணப்படுகின்றது. அதனால் மீனவர் கடற்றொழிலில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அதேநேரம் இச்சூறாவளி மேலும் தீவிரமடையக் கூடிய அச்சுறுத்தலும் நிலவுகின்றது. அத்தோடு நாட்டுக்குள் இடையிடையே மணித்தியாலத்திற்கு 60 கி. மீற்றர்களுக்கும் மேல் கடும் காற்று வீசலாம் என்றும் அவர் கூறினார்.

– தினகரன்

Published by

Leave a comment