கடந்த 05/04/2013 வெள்ளிக்கிழமை காலை 6.30 மணி-தீனுடைய பணிக்காக சென்ற நாங்கள் ஊர் திரும்புவதற்காக வேண்டி பஸ்ஸை எதிர்பார்த்த வண்ணம் ஏறாவூர் மெயின் வீதியில் நின்றோம். அத்தருணம் வாழைச்சேனையில் இருந்து மட்டக்களப்பு செல்லக் கூடிய ஏறாவூர் பஸ் டிப்போவுக்கு சொந்தமான பஸ் ஒன்று எமக்கு முன்னால் வந்து நின்றது.
நேராக ஊர் செல்ல விரும்பிய நாங்கள் அந்த பஸ்ஸில் ஏறாமல் பின் வாங்கினோம். அப்பொழுது அவ்விடத்தில் நின்று கொண்டிருந்த ஒரு சகோதரர் ‘பஸ் காத்தான்குடி வரை செல்லும் நீங்கள் இதில் ஏறிக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்.
‘காத்தான்குடி வரை செல்லுமா?’ என்ற வினாவுடன் பஸ்ஸில் ஏறிய எங்களை ஒரு ஆச்சரியம் முன்னோக்கியிருந்த்து. அதாவது வெளியில் இருந்து பார்க்கும் போது வெற்றிடம் போல் தெரிந்த ஆசனங்கள், உள்ளே சென்று பார்க்கும் போது கறுத்த அபாயா, கறுத்த பர்தா அதே நிறத்தில் முகத்திரை அணிந்திருந்த மாணவிகளால் நிறைக்கப்பட்டிருந்தது.
ஆசனங்களின் முன்பகுதியில் சில வாலிபர்களும் அதன் பின் இஸ்லாமிய கலாச்சாரப்படி ஆடை அணிந்திருந்த அந்த யுவதிகளும்-அந்தக்காட்சி எங்களை சற்று நேரம் வியப்பில் ஆழ்த்தியது.
இவர்கள் சுற்றுலா செல்லக் கூடியவர்களோ என்று மனதில் எழுந்த வினாவுக்கு விடை காண்பதற்காக அங்கே இருந்த வாலிபன் ஒருவனை அணுகினேன். எனக்கு அவர் அளித்த பதில்:
“நாங்கள் ஏறாவூர் மட்/அலிகார் வித்தியாலயதில் க.பொ.த உயர் தரம் படிக்கக் கூடிய மாணவர்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விஞ்ஞான பாடத்திற்காக மட்டக்களப்பில் உள்ள பிரத்தியோக வகுப்பொன்றிற்கு வருகிறோம். எங்களுக்கென்று ஏறாவூர் பஸ் டிப்போவிற்கு சொந்தமான இந்த பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் அனைவரும் ஓரிடத்தில் ஒன்று சேர்வோம். பஸ் அவ்விடத்திற்கு வந்து எம்மை அழைத்துச் செல்லும். அவ்வாறே அதே பஸ்ஸில் ஊர் வந்து சேர்கிறோம். இவ்வேற்பாடு பாடசாலையில் கற்பிக்கின்ற சில ஆசிரியர்கள் மூலமாகவே செய்து தரப்பட்டது”.
இவ்வாறு இவர் அளித்த பதிலும் தமக்களிக்கப்பட்ட சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்து எல்லை கடந்த செயற்பாடுகளில் ஈடுபட்டு பெற்றோருக்கும், ஊராருக்கும் அவமானத்தை உண்டாக்கக்கூடிய சிலர் இன்றைய இளம் சமுதாயத்தில் இருக்கும் நிலையில், தமக்கென ஒரு கட்டுப்பாட்டை ஏற்படுத்தி இன்றைய இளம் சமுதாயத்தினர் மத்தியில் பரவியுள்ள சமூகத்தை சீரழிக்கும் நோய்களில் இருந்து தம்மை பாதுகாக்க இம்மாணவர்கள் செய்யும் கூட்டு முயற்சி எமக்கு வியப்பையும் சந்தோசதையும் அளித்தது.
உண்மையில் தற்காலத்தில் பெண்கள் தனியாக வெளியூர்களுக்கு பிரத்தியோக வகுப்பிற்காக செல்வதின் காரணமாக சமூக சீர்கேடுகளும் பல கசப்பான நிகழ்வுகளும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இவ்விடயத்தில் தீர்வு காண தடுமாறும் பெற்றோர்களும், ஆசிரியர்களும், ஊர்த்தலைவர்களும் ஏன் தம்பிள்ளைகளுக்கும் ஒரு கூட்டான ஏற்பாட்டை செய்து கொடுக்கக் கூடாது?
‘தனியாக உள்ள ஆட்டைத்தான் ஓநாய் பிடிக்கும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆடுகள் கூட்டாக இருந்தால் அவைகளை ஓநாய்களால் எதுவும் செய்ய முடியாது.
அவ்வாறே நம்பிள்ளைகளுக்கும் ஓரிடத்தில் ஒன்று சேர்த்து அவர்களுக்கென்ற பிரத்தியோக பஸ் ஒன்றை ஏற்பாடு செய்து இஸ்லாமிய வரையறைகளை பேணி கூட்டாக சென்று கூட்டாக வருவதின் மூலமாக ஓநாய்களின் பிடியிலிருந்து தப்பிக்கலாம் அல்லவா?
பெற்றோர்களே, ஆசிரியர்களே நிதானமாய் சிந்தியுங்கள். தம் பிள்ளைகள் விடயத்தில் அவர்களால் கண்குளிர்ச்சி அடைய வேண்டிய நாம் கண்கலங்க கூடாது. அவர்களுக்கான பாதுகாப்பு வேலியை அமைப்பது எமது பொறுப்பே. இது விடயத்தில் மட்/அலிகார் மஹா வித்தியாலய மானவர்களின் கூட்டு நடவடிக்கையை ஏன் நாம் முன்மாதிரியாக கொள்ளக் கூடாது. எனவே சிந்திப்போம், செயற்படுவோம் எம்பிள்ளைகள் விடயத்தில்…………………
![Science-class-at-Manchest-001[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/05/science-class-at-manchest-0011.jpg?w=150&h=90)
Leave a reply to mohamed riyas Cancel reply