நபி (ஸல்) அவர்களின் அழுகை

3066618713_45d9751403[1]ஆண்கள், பெண்கள் என அனைவருமே அழுகிறார்கள். அவ்வழுகைகள் யாருக்காக, எதற்காக என்பதை நாம் யாரும் பெரிதாக கவனத்தில் எடுப்பதில்லை. நபி (ஸல்) அவர்கள் விரும்பினால் உலகமே அவர்களின் கையில், சுவர்க்கத்தின் உயர்ந்த இடத்தில் அவர்கள் இருக்கும் நிலையில் சுவர்க்கம் அவர்களுக்கு முன் அவ்வாறான நிலையிலும் நபிகளார் அழுதார்கள்.

ஆம் அது நல்லடியார்களின் அழுகை. அவர்கள் தொழுகையில் அல்லாஹ்விடம் பேசும் போதும், குர்ஆன் ஓதக் கேட்கும் போதும் அழுவார்கள். இது அவர்களின் உள்ளம் மிகவும் மென்மையானதாக இருந்ததால் உள்ளம் சீர் பெற்றதனால் அல்லாஹ்வின் மகத்துவத்தை அறிந்ததனால் அவனைப் பயந்ததனால் அவ்வாறு அழுவார்கள்.

“நான் ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது அவர்களிடம் சென்றேன். அழுகையின் காரணத்தால் கொதிக்கும் பாத்திரத்தில் ஏற்படும் சப்தம் போன்று அவர்களின் நெஞ்சிலிருந்து இரைச்சல் வந்து கொண்டிருந்தது? (நூல்: அபூதாவுத்)

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; நபி (ஸல்) அவர்கள் எனக்காக ஓதுவீராக! எனக் கேட்டார்கள். உங்கள் மீதே குர்ஆன் அருளப்படும் போது நான் உங்களுக்காக ஓதவா? எனக் கேட்டேன். நிச்சயமாக நான் பிறரிடமிருந்து ஓதுவதைக் கேட்க விரும்புகிறேன் என்றார்கள்.

ஆகவே சூறதுன் நிஸாவை ஓதலானேன். அப்போது ‘இவர்களுக்கு சாட்சியாக உம்மை நாம் மறுமையில் கொண்டு வருவோம்’ எனும் வசனம் வரும்போது நபியவர்களின் இரு கண்களிலிருந்தும் நீர்வழிவதைக் கண்டேன். (நூல் : புகாரி)

நபியவர்களின் தாடி நரைத்த காட்சியைப்பார்த்த போது; அல்லாஹ்வின் தூதரே! உங்கள் தாடி நரைத்து விட்டதே! என அபூபக்கர் (ரழி) அவர்கள் கேட்க, சூறதுல் ஹுத், அல் வாகிஆ, அல் முர்ஸலாத், அந்நபஃ, குவ்விரத் ஆகிய சூறாக்கள் என்னை நரைக்கச் செய்தது என நபியவர்கள் பதிலளித்தார்கள். (நூல் திர்மிதி)

நபிகளாரின் பணிவு

நபி (ஸல்) அவர்கள் மனிதர்களில் மிக நற்குணமுடையவராக பூரண தோற்ற முடையவர்களாக இருந்தார்கள். ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தது போன்று நபியவர்களின் குணம் குர்ஆனாக இருந்தது. (நூல் : முஸ்லிம்)

“நிச்சயமாக நான் நற்குணங்களை பூர்த்தியாக்கவே அனுப்பப் பட்டுள்ளேன் என நபியவர்கள் கூறினார்கள். (நூல் : அஹ்மத்)

நபியவர்களின் பணிவுத் தன்மைகளில் உள்ளதுதான். அதிகப்புகழ், அளவு கடந்த பாராட்டுதல் போன்றவைகளை விரும்ப வில்லை. உமர் இப்னு கத்தாப் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், மர்யமுடைய மகன் ஈஸாவைப் புகழ்ந்தது போன்று என்னை நீங்கள் வரம்பு மீறிப் புகழாதீர்கள். நிச்சயமாக நான் ஓர் அடியானே. எனவே, என்னை அல்லாஹ்வின் அடியான், அவனது தூதர் என்றே கூறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : அபூதாவுத்)

அனஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: சில மனிதர்கள், நபியவர்களை அல்லாஹ்வின் தூதரே! எங்களது நல்லவரே’ எங்களது நல்லவரின் மகனே! எங்களது தலைவரே! எங்களது தலைவரின் மகனே! என அழைத்தனர். அதற்கு நபியவர்கள்: மனிதர்களே! உங்களது வழமையான சொல்லால் அழையுங்களே தவிர ஷைத்தான் உங்களை வழி கெடுக்கத் தேட வேண்டாம். நான் முஹம்மத், அல்லாஹ்வின் அடியான், அவனது தூதர், அல்லாஹ் எனக்குக் கொடுத்த அந்தஸ்துக்கு மேல் என்னை நீங்கள் உயர்த்து வதை நான் விரும்பவில்லை எனக் கூறினார்கள்” (நூல் : அந்நஸாயி)

சில மனிதர்கள் நபி (ஸல்) அவர்களை அளவு கடந்து புகழ்கின்றனர். நபியவர்கள் மறைவானவற்றை அறிபவர், நலவும், தீங்கும் அவர்களின் கரங்களில் உள்ளது, தேவைகளை நிறைவேற்றுபவர், நோய்களைக் குணப்படுத்துபவர் எனக் கொள்கையாகவே கொண்டுள்ளனர். ஆனால் அல்லாஹ் இவைகளை நிராகரித்து கூறுகிறான். “நபியே! நீர் கூறும், அல்லாஹ் நாடினாலே தவிர நான் எனக்கு யாதொரு நன்மையையோ அல்லது தீமையையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன். மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நன்மைகளை அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன். (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டிராது. (அல்குர்ஆன் : 07:188)

அனஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள், எந்தவொரு மனிதனும், அவர்களிடத்தில் நபியவர்களை விட மிக விருப்பமானவர் எவருமில்லை. இவர்கள், நபியவர்களைக் கண்டு எழுந்து நிற்பதை நபியவர்கள் வெறுக்கிறார்கள் என்பதை அறிந்திருந்த காரணத்திற்காக எழுந்து நிற்கவுமாட்டார்கள். (நூல் : அஹ்மத்)

நபியவர்களின் பணிவு மென் மேலும் எடுத்துக்கூறப்படுவதை அவதானியுங்கள். நபியவர்களிடம் ஒரு பெண் வந்து, உங்களிடம் எனக்கு ஒரு தேவையுண்டு எனக் கூறினாள். அதற்கு நபியவர்கள், நீர் விரும்பும் மதீனாவின் எப்பாதையிலாவது அமர்ந்து கொள்! நானும் அமர்கிறேன். உனது கோரிக்கையை செவிமடுக்கிறேன் என நபியவர்கள் கூறினார்கள். (நூல் : அபூதாவூத்)

நபி (ஸல்) அவர்கள் பணிவுடையவர்களுக்கு இலக்கணமானவர்களாகத் திகழ்ந்தார்கள். அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ஓர் ஆட்டின் விலா அல்லது காளை அன்பளிப்பாகப் பெற்றுக்கொள்ளும்படி நான் அழைக்கப்பட்டாலும் நான் விடையளிப்பேன். ஓர் ஆட்டின் விலா அல்லது கால் எனக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டாலும் அதை நான் பெற்றுக்கொள்வேன் என நபியவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரி)

ஒவ்வொரு காலத்திலும், நேரத்திலும் இடத்திலும் பெருமைக் காரர்களுக்கு தடையாக அவர்களின் பெருமையை, அவர்களின் உயர்வை கீழிறக்கும் நபி மொழிகள் அதிகமாகக் காணப்படுகின்றன. “எவருடைய உள்ளத்தில் கடுகளவேனும் பெருமை இருக்குமோ அவர்கள் சுவனம் நுழையமாட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம்)

கடுகளவு பெருமை, கர்வம் இருந்தாலும் சரியே, அது நரகத்தின் பாதையாகவே இருக்கிறது. தனது நடையில் கர்வம் கொண்ட தற்பெருமையானுக்குரிய தண்டனையை சிந்தித்துப் பார்க்க வேண்டும். அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முற்காலத்தில் ஒரு மனிதன் தனக்குப் பிடித்த ஆடையை அணிந்து கொண்டு நன்கு தலைவாரிக் கொண்டு தற்பெருமையுடன் நடந்து சென்று கொண்டிருந்தவனை திடீரென அல்லாஹ் பூமிக்குள் புதையச் செய்து விட்டான். அவன் மறுமை நாள் அவ்வாறே பூமிக்குள் குலுங்கிய படி அழுத்திச் சென்று கொண்டேயிருப்பான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

Leave a comment