காத்தான்குடி: 127வது சர்வதேச தொழிலாளர் தினம் மே முதலாம் திகதி இன்று புதன்கிழமை உலகளாவிய ரீதியில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இலங்கையில் நாலாபக்கங்களிலும் தொழ்லாளர் சங்கத்தின் ஊர்வலங்கள், கூட்டங்கள், நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதற்கமைவாக கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் தொழிலாளர்களினால் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடிப் பிரதேசத்தில் ஆட்டோ முச்சக்கரவண்டி சாரதிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவிருந்து நீண்ட ஊர்வலம் இடம்பெற்றது.
பிரதான வீதிகளில் ஹோட்டல்கள் உட்பட கடைகள் பூட்டப்பட்டு சிவப்பு நிறக் கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன.
இந்த ஊர்வலத்தில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான யூ.எல்.எம்.முபீன், கே.எல்.எம்.பரீட்,
முச்சக்கரவண்டி சாரதிகள் நலன்புரிச் சங்கத்தலைவர், சாரதிகள், தொழிலாளிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவிருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஊர்வலம் காத்தான்குடி ஏ.எல்.எஸ் மாவத்தை வரையில் இடம்பெற்றது.
தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூக சாதனைகளை வலியுறுத்தி இத்தினம் சர்வதேச ரீதியில் கொண்டாடப்படுகின்றது.
தொழிலாளர்களின் வியர்வை,கூடிய உழைப்பு என்பற்றை அடிப்படையாக வைத்து அவர்களை கௌரவப்படுத்தும் வண்ணம் குறித்த தொழிலாளர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
இதேவேளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மேதின நிகழ்வு,ஏனைய கட்சிகளின் மேதின நிகழ்வு என்பன மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment