காத்தான்குடி: காத்தான்குடி விக்கடரி விளையாட்டுக்கழக ஸ்தாபகர் மர்ஹூம் அக்பர் ஹாஜியார் அவர்களின் ஞாபகார்த்தமாக காத்தான்குடி விக்டரி விளையாட்டுக் கழகமும், பரீட் பவுண்டேசனும் இணைந்து நடாத்திய மாபெரும் மின்னொளி உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி, கடந்த 25,26,27, மற்றும் 28ம் திகதிகளில் காத்தான்குடி விக்டரி மைதானத்தில் இடம்பெற்றது.
இச்சுறறுப்போட்டியில் காத்தான்குடியின் முன்னணிக் கழகங்களும் ஏறாவூர் மற்றும் ஓட்டமாவடி முன்னணிக் கழகங்களும் கலந்து சிறப்பித்தன.
இறுதிப்போட்டி 28ம் திகதி இரவு இடம்பெற்றது. இறுதிப்போட்டிக்கு காத்தான்குடி பதுரியா விளையாட்டுக்கழகமும், ஏறாவூர் யங் ஸ்டார் விளையாட்டுக் கழகமும் தெரிவாகி இருந்தன.
விறுவிறுப்பாக இடம்பெற்ற இறுதிப்போட்டியில் முதலாவது 90 நிமிட ஆட்டம் 1:1 என சம நிலையில் நிறைவடைந்ததால், தண்ட உதை மூலமாக வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்டது. இறுதியில் காத்தான்குடி பதுரியா விளையாட்டுக்கழகம் சம்பியன் பட்டத்தை வென்றது.
இலங்கை உதைப்பந்தாட்ட மத்தியஸ்தர் சபையினால் தெரிவு செய்யப்பட்ட சிறந்த 3 நடுவர்கள் இச்சுற்றுப்போட்டிக்கு நடுவர்களாக செயற்பட்டனர்.
முதலாவது இடத்தை வென்ற காத்தான்குடி பதுரியா விளையாட்டுக்கழகம், இரண்டாம் இடத்தைப் பெற்ற ஏறாவூர் யங் ஸ்டார் கழகம் ஆகியவற்றுக்கு மிகப் பெறுமதிமிக்க வெற்றிக் கிண்ணங்களும், ஆறுதல் பரிசில்களும் வழங்கி கௌவரிக்கப்பட்டன. சிறந்து வீரராக காத்தான்குடி பதுரியா விளையாட்டுக் கழக வீரர் நியாஸ் தெரிவு செய்யப்பட்டு, சிறந்த வீரருக்கான கிண்ணத்தையும் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களும், சிறப்பு அதிதிகளாக பரீட் பௌன்டேசன் தலைவரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான கே.எல்.எம். பரீட், காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச். எம். அஸ்பர், காத்தான்குடி நகரசபை உதவித் தவிசாளர் அல்ஹாஜ் எம். ஜெஸீம், நகரசபை உறுப்பினர் எம். சியாட் உட்பட விக்டரி கழக மூத்த உறுப்பினர்களும், விளையாட்டுக்கழக உறுப்பினர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.
காத்தான்குடி உதைப்பந்தாட்ட வரலாற்றில் 1984ல் காத்தான்குடி யுனைடட் விளையாட்டுக்கழகம் முதன்முறையாக மின்னொளியில் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியை நடாத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment