பழுளுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி: இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய ரீதியிலான அல்குர்ஆன் மனனம், கிராஅத் போட்டிகள் 2013 இன்று சனிக்கிழமை காலை காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லூரியில் ஆரம்பமானது.
நாடளாவிய ரீதியிலுள்ள சகல மாவட்டங்களிலிருந்தும் சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கும் பற்றும் இப்போட்டியில் ஆண்களுக்கான மனனப்போட்டி இன்று காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லூரியிலும் பெண்களுக்கான அல்குர்ஆன் மனனப் போட்டி காத்தான்குடி ஜாமியதுஸ் ஸித்தீகிய்யா பெண்கள் அரபுக்கல்லூரியில் இடம்பெற்றன.
நாளைய தினம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கிராஅத் போட்டிகள் குறித்த கல்லூரிகளில் இடம்பெறவுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்குப் பிராந்தியப் பொறுப்பாளர் ஜுனைத்(நளீமி) தெரிவித்தார்.
இதன் ஆரம்ப வைபவத்தில் இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஸமீல் (நளீமி), முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்குப் பிராந்தியப் பொறுப்பாளர் ஜுனைத்(நளீமி), எகிப்து மற்றும் ஈரானிலிருந்து வரவழைக்கப்பட்ட அரபுநாட்டு நடுவர்கள், காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் நடுவர்கள், மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த அல்குர்ஆன் மனனம், கிராஅத் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெரும் மாணவ மாணவிகளுக்கான பரிசளிப்பு வைபவம் ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment