மட்டக்களப்பு: ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி இராசதுரை கிராமம்-03ல் அமையப் பெற்றுள்ள கோணமலை கண்ணதாசன் (வயது 36) என்பவரின் வீடு நேற்று வியாழக்கிழமை இரவு இனந்தெரியாதோரினால் ஆயுததாரிகளினால் தாக்கப்பட்டு அங்குள்ள உடைமைகளுக்கும் பொருட்களுக்கும் சேதமேற்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வீட்டு உரிமையாளர் கோணமலை கண்ணதாசனிடம் கேட்ட போது
‘நேற்று இரவு 08.00மணியளவில் நான் வீட்டிலே இல்லாத போது சிலர்(குறிப்பாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தனின் அடியாட்கள்)இந்த நாசகார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கான முழுப்பொறுப்பும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரசாந்தனும் த.ம.வி.பு கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சி.சந்திரகாந்தனுமே கூற வேண்டும் என என அவர் குறிப்பிட்டார்.
ஏலவே நான் த.ம.வி.பு கட்சியில் உறுப்பினராக இருந்து கடந்த மாகாண சபைத் தேர்தலின் பின்னர் கட்சியிலிருந்து விலகினேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சம்பவம் இடம்பெற்ற போது வீட்டில் இருந்த வீட்டு உரிமையாளரின் மனைவி திருமதி றுஷாந்தகுமாரி கருத்துத் தெரிவிக்கையில்
வீட்டின் ஓடுகளுக்கு கல்லெறிந்து விட்டு பின்னர் வீட்டு வேலிகளை உடைத்து விட்டு வீட்டிற்குள் உட்புகுந்த குறித்த கும்பல் வீட்டில் குளிர்சாதனப் பெட்டி,தொலைக்காட்சிப் பெட்டி,அலுமாரி,கதிரைகள் மற்றும் வீட்டிலுள்ள உபகரணங்களை உடைத்து விட்டு சுமார் இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை எடுத்துச் சென்றதாகவும் அது மாத்திரமின்றி சம்பவம் இடம்பெற்ற வேளையில் வீட்டிலே இருந்த எனது பிள்ளைகளுக்கு அடித்து அவர்களை தாக்கியதுடன் அவர்களில் இருவரின் தலையில் பலமாக அடிக்கப்பட்டு தற்போது ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே இவர்கள் பல முறை எமக்கு இப்படியான நாசகார நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் சம்பவம் தொடர்பில் பொலிஸாரும் இரானுவத்தினரும் ஸ்தலத்திற்கு வந்து விசாரித்ததாகவும் குறித்த மனைவி மேலும் தெரிவித்தார்.
நேற்றிரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் தாக்கப்பட்ட வகுசனா(வயது13),ரதுசன் (வயது04)ஆகிய எனது இரு பிள்ளைகளும் ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் அட்டகாசம் ஓங்கியுள்ளதாகவும் இவர்களினால் எனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் வீட்டு உரிமையாளர் கோணமலை கண்ணதாசன் தெமரிவித்தார்.
இது தொடர்பில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தனிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது
நேற்று இடம்பெற்ற சம்பவத்திற்கும் எனக்கும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கும் எவ்வித தொடர்புமில்லை.குறித்த வீட்டு உரிமையாளரான கோணமலை கண்ணதாசன் என்பவர் முன்னாள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் (ஆயுதக் கலாசார காலகட்டத்தில்)இவர் ஒரு உறுப்பினராக இருந்தார்.கட்சியை விட்டு விலகியதன் பின்னர் அவருக்கும் கட்சிக்கும் எவ்வித தொடர்புமில்லை என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
குறித்த வீட்டு உரிமையாளர் இரு திருமணங்கள் முடித்துள்ளதாகவும் இவரின் இரண்டாவது மனைவின் தம்பி,முதலாவது மனைவியின் தம்பி ஆகியோருக்கிடையில் இடம்பெருகின்ற குடும்பப் பிரச்சினையை இவர்கள் அரசியலாக்கி அதில் இலாபம் அடைய முனைகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சம்பவம் இடம்பெற்ற போது வீட்டில் வீட்டு உரிமையாளரின் மனைவி,அவரது தாய்,அவரது 04பிள்ளைகள் ஆகியோர் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment