கொழும்பு: அனைவருக்கும் மின்சாரம் என்ற திட்டம் சகல கிராமங்களிலும் அமுல்படுத்தப்படுவதாலும் நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாத காரணத்தினாலும் மின் கட்டண உயர்வைத் தவிர்க்க முடியாதுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:
நாட்டின் தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தி நடைபெறாத நாடுகளில் மின்சார வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது. ஆனால் இலங்கையில் மின்வெட்டு இல்லை.
35 சதவீத நீர் மின்சார உற்பத்தியை இலங்கை மின்சார சபை எதிர்பார்த்தது. ஆனால் 16 சதவீத நீர் மின்சாரமே இப்போது கிடைக்கின்றது.
அனல் மின் நிலையங்கள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதால் பாரிய செலவு ஏற்படுவதால் நிலக்கரி மின் உற்பத்தி மற்றும் காற்றாடி மின் உற்பத்திகளை ஊக்குவிக்க அரசு கவனம் செலுத்திவருகின்றது.
இந்த கட்டண உயர்வு மாற்ற முடியாததொரு தீர்மானமல்ல. சாதகமான ஒரு நிலை உருவாகினால் கட்டணங்கள் மறுசீரமைக்கப்பட இடமுண்டு என்றும் அமைச்சர் கூறினார்.
– அரசாங்க தகவல் திணைக்களம்
![keheliya1[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/07/keheliya11.jpg?w=150&h=120)
Leave a comment