ஓட்டமாவடி: சமுர்த்திப் பயனாளிகளுக்கான உதவிக்கொடுப்பனவைப் பெறுவதற்காக ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள சமுர்த்தி வங்கிக்கு முன்னால் இன்று புதன்கிழமை சுமார் முன்னூறுக்கும் அதிகமான பொது மக்கள் பெருந்திரளாக கூடியுள்ளனர்.
இதுவரைக்கும் அந்தப் பிரதேசங்களினூடாக வழங்கப்பட்டுவந்த இவ்வுதவித்தொகை இம்முறை காவத்தமுனை, மீராவோடை, தியாவெட்டுவான், மாஞ்சோலை போன்ற பிரதேசங்களிலுள்ள ஒட்டுமொத்த சமுர்த்திப் பயனாளிகளையும் ஒரே இடத்தில் சேர்த்தமையினால் அப்பயனாளிகள் பெரும் உபாதைகளை எதிர்நோக்கினர்.
காலை எட்டு மணி தொடக்கம் நண்பகல் வேளையையும் தாண்டி அவ்விடத்தில் தங்களின் உதவித்தொகையினைப் பெற்றுக் கொள்வதற்காகக் குழுமியிருக்கும் பொதுமக்களில் வயது முதிர்ந்த சில பெண்கள் வெயிலின் அகோரத்தினால் மயங்கி விழுந்ததையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
இது தொடர்பில் சம்மந்தபட்ட அதிகாரிகள் கவனமெடுக்க வேண்டுமென அவ்விடத்தில் குழுமியிருந்த பொது மக்கள் தெரிவித்தனர்.





Leave a comment