பிரபாகரன், சூசை போரில் மரணம்- பொட்டு அம்மானின் மனைவி சயனைட் அருந்தி உயிரிழப்பு: சரத் பொன்சேகா


mullivaikkal-may19[1]
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும் கடற்புலிகளின் தளபதி சூசையும் போரில் கடைசிவரை போராடி உயிரிழந்தனர் என்று இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அண்மையில் கடற்புலிகளின் தளபதி சூசை சயனைட் அருந்தியும் துப்பாக்கியால் சுட்டும் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இது தொடர்பாக கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த பொன்சேகா,
“பிரபாகரனும் சூசையும் கடைசிவரை போராடினர். பிரபாகரன் மற்றும் சூசையின் குண்டுதுளைத்த உடல்களை நாம் கண்டெடுத்தோம். அவர்கள் கடைசிவரை போராடியே உயிரிழந்தனர் என்பதை வெளிப்படுத்தும் ஆதாரங்கள் எமக்கு கிடைத்தன. பிரபாகரனும், சூசையும் சயனைட் அருந்தவோ இல்லை. மற்ற போராளிகளை சயனைட் அருந்துமாறு உத்தரவிடவும் இல்லை”.
mullivaikkal-may19[1]
“போரின் கடைசி நாளில் பிரபாகரன், சூசையுடன் மொத்தம் 100 விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகள் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.அதே நேரத்தில் புலிகளின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மானைப் பற்றி எங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஆனால் அவரும் நந்திக் கடல் பகுதியில் தப்பிக்க முயலும்போது கொல்லப்பட்டிருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம். தற்கொலை அங்கியை வெடிக்க வைத்து பொட்டு அம்மான் உயிரிழந்ததாக கேபி அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.ஆனால் பொட்டு அம்மானின் மனைவி சயனைட் அருந்தி உயிரிழந்தார். அவரது உடலை நாங்கள் கைப்பற்றினோம். மேலும் அவரது கழுத்தில் மற்றொரு சயனைட் குப்பியும் இருந்தது”  என்றார் பொன்சேகா.
(OIT)

Published by

Leave a comment