– பழுளுல்லாஹ் பர்ஹான்

வெலிகம: சந்திக்குச் சந்தி இனவாதத்திற்கு எண்ணெய் வார்க்கப்படுகின்ற இன்றைய காலகட்டத்தில், இன நல்லுறவை உறுதிப்படுத்தத் தக்க முன்மாதிரி நிகழ்வொன்று வெலிகம அல் – இஹ்ஸான் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் Families Relief – Sri Lanka Trust நிறுவனத்தின் அனுசரணையுடன் கடந்த 09ம் திகதி வெலிகமையில் இடம்பெற்றது.
குடி தண்ணீருக்காக சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வந்த வறிய 11 சிங்களக் குடும்பங்களுக்கும் 04 முஸ்லிம் குடும்பங்களுக்கும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையிலிருந்து குடிநீர் வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்காக சுமார் ரூபா 244,000/- பெறுமதியான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.

Families Relief – Sri Lanka Trust நிறுவனத்தின் அனுசரணையுடன் வெலிகம அல் – இஹ்ஸான் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டின் கீழ் வெலிகம குட்செட் வீதி, சனசமூக அபிவிருத்தி மையத்தில் வெலிகம அல் இஹ்ஸான் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் அஷ்ஷெய்க் M.O. பத்ஹுர் ரஹ்மான் (பஹ்ஜி) தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வெலிகம, அக்ரபோதி விகாரையின் விகாராதிபதி மிதிகம சோபித தேரோ, வெலிகம நகராதிபதி மொஹமட் ஹுஸைன் ஹாஜியார் மொஹமட், நகரசபை உறுப்பினர் ஷியாம் (UNP), பிரதேச சபை உறுப்பினர் மதீன் முணாஸ் (PA), கல்பொக்க மருத்துவ விடுதி பிரதம வைத்தியர், வெலிகம பொலிஸ் நிலையத்தின் பிரதிநிதி, சிவில் பாதுகாப்புப் படையணி உறுப்பினர்கள், Families Relief – Sri Lanka Trust நிறுவனத்தின் பிரதிநிதி MS. முஹம்மத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறித்த வெலிகம அல் இஹ்ஸான் நலன்புரிச் சங்கம் சமூகத்தில் ஆண்மீக ரீதியான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவது மட்டுமல்லாமல் இனநல்லுறவைப்பேணும் பல்வேறு சமூக செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Leave a comment