காத்தான்குடி: சஊதி அரேபியாவுக்கு சென்றுள்ள காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியுமான சல்மா அமீர் ஹம்சா (9.4.2013) செவ்வாய்க்கிழமை சஊதி அரேபியாவின் ஜித்தா நகரிலுள்ள இலங்கை தூதுவராலயத்தின் கொன்சலர் நாயகம் ஏ.எல். உதுமா லெவ்வையை சந்தித்தார்.
இந்த சந்திப்பு ஜித்தா நகரிலுள்ள இலங்கை தூதுவராலயத்தின் கொன்சலர் நாயகத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன் போது சஊதி அரேபியாவில் பணிப்பெண்களாக தொழில் புரியும் இலங்கை பணிப்பெண்கள் தொடர்பாக சல்மா ஹம்சா கேட்டறிந்து கொண்டார்.
சஊதி அரேபியாவில் ஆவணங்களின்றி தொழில் புரிந்து வரும் இலங்கையை சேர்ந்தவர்கள் மற்றும் பணிப்பெண்களாக சென்று பல் வேறு பிரச்சினைகள் காரணமாக அந்த வீடுகளை விட்டு வெளியேறியுள்ள பணிப்பெண்களையும் மீள இலங்கைக்கு அனுப்பும் நடவடிக்கை மிக துரிதமாக இடம் பெற்றுவருவதுடன் வாரமொன்றுக்கு 70பேர் இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஜித்தா நகரிலுள்ள இலங்கை தூதுவராலயத்தின் கொன்சலர் நாயகம் ஏ.எல் .உதுமா லெவ்வை சல்மா ஹம்சாவிடம் தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து சஊதி அரேபியாவுக்கு பணிப் பெண்களாக செல்லும் இலங்கை பணிப்பெண்களில் 4 வீதமானோர் மாத்திரமே துஷ்பிரயோகங்களுக்கும் துயரங்களுக்கும் உள்ளாவதாக கொன்சலர் நாயகம் ஏ.எல்.உதுமா லெவ்வை தெரிவித்ததாக காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியுமான சல்மா அமீர் ஹம்சா தெரிவித்தார்.
இந்தியா மற்றும் பங்களாதேஸ் போன்ற நாடுகளில் இருந்து சஊதி அரேபியாவுக்கு பணிப்பொண்களாக செல்லுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கையிலிருந்தும் பணிப்பெண்களை சஊதி அரேபியாவுக்கு அனுப்புவதை தடை செய்து ஆண்களை வேலை வாய்ப்புக்களுக்கு அனுப்புவதை ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் கொன்சலர் நாயகம் குறிப்பிட்டதாக அவர் இதன் போது குறிப்பிட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஸல்மா அமீர் ஞாயிற்றக்கிழமையன்று சஊதி அரேபியாவுக்கு சென்றமை குறிப்பிடத்தக்கது.




Leave a comment