கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மு.கா வேட் பாளராகப் போட்டியிட்ட கொழும்பு மாநகர சபை முன்னாள் துணைமேயர் அஸாத் சாலி நேற்று முன் தினம் காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள வளவொன்றில் நடத்திய அரசியல் கூட்டம் களேபரத்தில் முடிந்தது.
‘சமகால அரசியல்’ என்ற கருப் பொருளில் இவரால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் இடை நடுவில் புகுந்த இனந்தெரியாத சிலர் ஆஸாத் சாலியை தூஷித்தவண்ணம் கோஷங்களை எழுப்பியதுடன் அங்குள்ள கதிரை மேசை களையும் அடித்து நொருக் கினர்.
இந்தச் சம்பவத்தினால் ஏற்பட்ட அல்லோல கல்லோலத்தினால்
கூட்டம் இடை நடுவே கைவிடப்பட்டு ஆஸாத் சாலி கொழும்பு திரும்ப வேண்டியேற்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் கூறப்படுவதாவது, கிழக்கு தேர்தலின் பின்னர் மீண்டும் கொழும்பிலிருந்து வந்த ஆஸாத் சாலி, காத்தான்குடி மக்களுக்கு வழங்கவென அரிசி, மா, பருப்பு, சீனி அடங்கிய நிவாரணப் பொதிகளையும் தன்னுடன் கொண்டு வந்ததாகக் கூறப்படுகின்றது.
தேர்தல் காலத்தில் ஆஸாத் சாலியின் பிரசார உத்திகள் மற்றும் தேர்தலின் பின்னர் கட்சிகள் தொடர்பாக அவரின் விமர்சனங்களில் ஆவேசம் கொண்டிருந்தவர்களே இந்தக் குழப்பத்தின் பின்னணியில் இருப்பதாகக் கூறப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் வாக்காளர்களை தன்னகத்தே கொண்டுள்ள காத்தான்குடியில் மூன்று அரசியல் சக்திகள் செயற்படுகின்றது. கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அரசியலில் ஈடுபட்டு வரும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் வாக்கு வங்கிகள் பாலமான ஒரு புறம் இருக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காரங்கிஸ் மற்றும் நல்லாட்சிக்கான இயக்கம் ஆகியனவும் அங்கு அரசியலில் ஈடுபடுகின்றன.
மு.காவின் ஸ்தாபகர்களில் ஒருவரான ஹிஸ்புல்லா, தற்போது ஐ.ம.சு.முன்னணியில் இருந்த போதும் அவரது வாக்கு வங்கியில் எந்தக் குறைவும் ஏற்படவில்லை.
அத்துடன் மு.காவும் கணிசமான வாக்குகள் கொண்டுள்ளது. அப்துர்ரஹ்மான் தலைமையிலான நல்லாட்சிக்கான இயக்கமும் சுமார் 5000 வாக்குகளை இந்தத் தேர்தலிலும் பெற்றிருக்கின்றது.
இந்த நிலையில் 4ஆவது சக்தியாக இங்கு வந்து முஸ்லிம் வாக்குகளை சிதைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஆஸாத் சாலி மீது காத்தான்குடி மக்கள் கோபாவேசம் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத் தேர்தலை மையமாக வைத்தே ஆஸாத் சாலி காய் நகர்த்துவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதன் மூலம் கடந்த பல தசாப்தங்களாகக் காப்பாற்றப்படும் காத்தான்குடி பிரதிநிதித்துவம் இல்லாதொழிக்க வாய்ப்புண்டு என மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
கடந்த தேர்தலில் கிழக்கு மக்களை தனது பசப்பு வார்த்தைகளால் ஏமாற்றி சுமார் 6000 வாக்குகளை ஆஸாத் சாலி பெற்றுக்கொண்டதனால், ஐ.ம.சு.முன்னணியில் போட்டியிட்ட அலிசாஹிர் மெளலானா தோல்வியுற நேர்ந்தாகவும் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
நிவாரணங்கள் மூலமும் நடமாடும் சேவைகள், மூலமும் மக்களின் வாக்குகளை அபகரிக்கலாமென எவரும் எண்ணக்கூடாது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கிழக்குத் தேர்தலில் போட்டியிட்ட ஆஸாத் சாலி முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந் ததன் பின்னர் அக்கட்சியையும் தலைவரையும் நாளொரு தடவை தூற்றி வருவது கிழக்கு மக்கள் மத்தியில் ஆஸாத் சாலி மீது ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளதாக காத்தான்குடி மு.கா தொண்டர் ஒருவர் தெரிவித்தார்.
கிழக்குத் தேர்தலில் போட்டியிட ஆஸாத் சாலிக்கு ரிக்கெற் வழங்கிய தமது கட்சியின் முக்கியஸ்தர்களை அவர் நொந்து கொண்டார். கட்சிக்குத் துரோகம் செய்யும் இவ்வாறான அரசியல்வாதிகளுக்கு கிழக்கு மக்கள் நல்ல பாடம் படிப்பிப்பர் என அவர் குறிப்பிட்டார்.
-தினகரன்
Leave a reply to tharmika Cancel reply