அமெரிக்க தாக்குதலில் பதுருதீன் ஹக்கானி இறந்ததாக சந்தேகம்!

-BBC

பாகிஸ்தானில் ஹக்கானி வலையமைப்பு என்ற ஆயுதக் குழுவின் முன்னணித் தலைவர் ஒருவர் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் பழங்குடியினப் பகுதியில் நடத்திய தாக்குதலில் இறந்துவிட்டதாக உறவுக்காரர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் பதுருதீன் ஹக்கானி கொல்லப்பட்டார் என்ற கூற்றை ஹக்கானி வலயமைப்பு சார்பாகப் பேசவல்லவர் மறுத்துள்ளார்.

வேறு ஒரு ஆயுதக் குழுவைச் சேர்ந்த பாகிஸ்தானிகள்தான் அந்த ஆளில்லா விமானத் தாக்குதலில் இறந்தது என்று அவர் கூறினார்.

இவ்வலயமைப்பின் முன்னணித் தலைவர் இறந்துள்ளார் என்பதை அமெரிக்க அதிகாரிகளோ பாகிஸ்தான் அதிகாரிகளோ இதுவரை உறுதிசெய்திருக்கவில்லை.

ஆப்கானிஸ்தானில் நடந்த சில மோசமான தாக்குதல்களின் பின்னணியில் இந்த ஹக்கானி வலயமைப்பு சம்பந்தப்படிருந்தது.

ஹக்கானி வலயமைப்பின் செயற்பாடுகளைத் தீர்மானிக்கின்ற மூத்த தலைவராகவும், அவ்வமைப்பின் நிதி விவகாரங்களுக்கான தலைவராகவும் இருந்துவந்தவர் பதுருதீன் என்று கூறப்படுகிறது.

அமெரிக்க உளவுத்துறையினர் ஆளில்லா விமானம் மூலம் நடத்துகின்ற இந்த தாக்குதல்களில் எவர் உயிரிழந்தார் என்று உறுதிசெய்வதற்கு நாள் கணக்கில் வாரக் கணக்கில் ஆகும் ஏனென்றால் இலக்குவைக்கப்படும் இடங்கள் அந்த அளவுக்கு தொலைதூரமான ஒதுக்குப்புறமான இடங்களாகவும் இருக்கின்றன.

தவிர இப்பகுதிகள் தீவிரவாதிகளின் பிடியில் இருந்துவரும் இடங்களாகும்.

பதுருதீன் ஹக்கானி இறந்தார் என்ற செய்தி உறுதி செய்யப்படுமானால் ஆப்கானில் உள்ள அமெரிக்கப் படைகளைப் பொறுத்தவரை ஒரு பெரிய வெற்றிதான்.

ஏனென்றால் அவர்கள் எட்டுவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டிய எதிரிகளாக இருந்துவருவது இந்த அமைப்புதான்.

 

 

 

Published by

Leave a comment