கொரோனா வைரஸ்: உயிரிழப்பில் சீனாவை விஞ்சிய இத்தாலி

கொரோனா வைரஸால் இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 427 அதிகரித்து மொத்தம் 3,405 என்ற எண்ணிக்கையை அடைந்துள்ளது. இதன் மூலம், கொரோனா வைரஸ் முதன் முதலாக கண்டறியப்பட்ட சீனாவை விட அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்ட நாடாக இத்தாலி உருவெடுத்துள்ளது.

தங்களது நாட்டில் இதுவரை கோவிட்-19 நோய்த்தொற்றால் 3,245 பேர் உயிரிழந்துள்ளதாக சீனா தெரிவித்தாலும், அந்த தரவின் உண்மைத்தன்மை குறித்த கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்த மார்ச் 12ஆம் தேதி இத்தாலியில் அறிவிக்கப்பட்ட நாடு தழுவிய முடக்கம் வரும் 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் பெரும்பாலான பகுதிகளை சேர்ந்தவர்கள் இந்த முடக்கத்தின் காரணமாக வீடுகளுக்குள்ளேயே இருந்த நிலையிலும், அந்த நாட்டில் கட்டுக்கடங்காத அளவுக்கு கொரோனா வைரஸ் பரவல் இருந்து வருகிறது.

இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,030 என்னும் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. மேலும், இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,44,517ஆக உயர்ந்துள்ளது.

எனினும், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கையில் தொடர்ந்து சீனாவே முன்னிலையில் உள்ளது. இதுவரை சீனாவில் கொரோனா வைரஸால் 81,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தாலியில் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 41,035ஆக உள்ளது.

Published by

Leave a comment