பிரதமரை அவசரமாக சந்திக்கிறது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

அகமட் எஸ். முகைடீன்
தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் தலைமையிலான அவர்களுடைய 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை பிரதேச செயலகமாக தரமுயர்த்தித் தருமாறு கடும் அழுத்தத்தை கொடுத்துள்ளனர். பிரதமருடனான தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் இச்சந்திப்பின்போது உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிரஅபேவர்த்தனவும் பிரசன்னமாகியிருந்துள்ளார். 
இவ்விடயம் சம்பந்தமாக தனது அமைச்சின் இராஜாங்க அமைச்சரான ஹரீஸிடம் அமைச்சர் வஜிரஅபேவர்த்தன தெரியப்படுத்தியபோது அதற்கு இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். அத்தோடு இன்று (7) பாராளுமன்றத்திலும் மிகக் காரசாரமாக அவ்விடயத்தை எதிர்த்து இராஜாங்க அமைச்சர் உரையாற்றியுள்ளார்.  
மேலும் இது தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் கவனத்திற்கு ஹரீஸ் கொண்டுவந்துள்ளார். இவ்விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸை மீறி எதுவும் செய்ய மாட்டேன் என பிரதமர் அரசயில் குழப்ப நிலை ஏற்பட்ட காலத்தில் வாக்குறுதியினை வழங்கிவிட்டு தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அழுத்தத்தின்பேரில் பிரதமரும் அமைச்சரும் சில நடவடிக்கைகளில் ஈடுபடுவதை எந்தக் காரணத்தைக் கொண்டும் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்த ஹரீஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இது தொடர்பில் மிகக் காட்டமான நடவடிக்கையினை எடுக்க வேண்டுமேன தனது கட்சித் தலைவரை வலியுறுத்தியுள்ளார். 
அதனைத் தொடர்ந்து இது சம்பந்தமாக பிரதமருடன் தீர்க்கமாக பேசும்வகையில் நாளை (8) வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு பிரதமருடனான பேச்சுவார்த்தை ஒன்றை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஏற்பாடு செய்துள்ளார். இப்பேச்சுவார்த்தையின்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது கடுமையான நிலைப்பாட்டை தெரிவிக்கவுள்ளது.

Published by

Leave a comment