– இர்ஷாட் ஏ. காதர்
கொழும்பு: பேரினவாதக் குழு இலங்கை முஸ்லிம்களை நோக்கி திட்டமிட்டு நகர்த்தப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை சிரியாவுக்காக பேரளவில் குரல்கொடுத்துக்கொண்டிருந்த நாம், நமக்கு நாமே குரல் கொடுக்க முடியாமல் முடிக்கப்பட்டிருக்கிறோம் இன்று. இலங்கை வரலாற்றில் அதிகூடுதலான எண்ணிக்கையில் பள்ளிவாயல்கள் கடந்த 6 நாட்களுக்குள் தாக்கப்பட்டிருக்கின்றன. பெறுமதியான முஸ்லிம் வர்த்தகர்களின் சொத்துக்களும் தீ வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றையும் கடந்து ஒரு உயிர் பறித்தெடுக்கப்பட்டிருக்கிறது.
இன்று வெள்ளிக்கிழமை. பேரினவாதக் காடையர் குழு இலக்கு வைத்திருக்கும் மற்றுமொரு நாள் இன்று. வதந்திகளாக இருப்பினும் நேற்று நள்ளிரவுவரை தொடர்ந்த வன்முறைகளை வைத்து நாங்கள் இலகுவாக விட்டுச் செல்ல முடியாது.
இதனால் முஸ்லிம் பிரதேசங்கள் விழிப்பாக இருப்பது கட்டாயக் கடமையாகும்.
அக்குரணை, மாளிகாவத்தை, காத்தான்குடி, கல்முனை, மடவளை போன்ற முஸ்லிம் ஊர்கள் இவர்களின் தாக்குதலில் முன்னிடத்தில் இருக்கின்றன.
இன்று இல்லாவிட்டாலும், வேறு ஒரு பின்னணியில் மேற்படி ஊர்களுக்குள் பிரவேசித்து தனிது வெறியைத் தீர்த்துக்கொள்ள அதிகப் பிரயத்தனம் இவர்களால் எடுக்கப்பட்டு வருகிறது.
வாகனங்களில் வரும் இவர்கள் பள்ளிவாயல்கள் மீதும், முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீதும், வீடுகள் மீதும் கல்லெறிந்து பெற்றோல் குண்டுகளையும் வீசிவிட்டுப் போவதுதான் முதலாவது இவர்களின் இலக்கு.
எதிர்ப்பு இல்லாவிட்டால் அல்லது சந்தர்ப்பம் கிடைத்தால் இறங்கி மேலும் தாக்குகின்றனர். கொள்ளை அடிக்கின்றனர்.
சி.சி.ரி.வி. கமெராக்களை உடைத்து நொறுக்குகின்றனர்.

இப்போது முஸ்லிம்கள் பயனிக்கும் வாகனங்கள் மீதும் கல்லெறிகின்றனர்.
முஸ்லிம்கள் அச்சத்துடனேயே வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
உலகம் முழுவதும் சமகால இலங்கை விடயம் எட்டி விட்டது.
பேரினவாத முகநூல் பக்கங்கள் முடக்கப்பட்டிருக்கின்றன.
வாய் மூடியிருந்த அரசியல்வாதிகள் ஓரிருவர் வாய்திறந்திருக்கின்றனர்.
இதைவிட நமக்கு இனி என்ன வேண்டும் என்று இனிமேலும் இலங்கையில் வாழ முடியாது.
ஒரு வர்த்தக நிலையத்தை சிங்கள பகுதியில் இனிமேல் ஆரம்பிக்க முடியாது.
இலங்கையில் எங்கையாவது இவ்வாறான ஒரு சம்பவம் எதிர்காலத்தில் இடம்பெற்றால் இவர்களின் அடுத்த இலக்கு என்னவாகும் என்பதை நினைத்துப் பார்க்க முடியாமல் இருக்கிறது.
தரீக்கா வாதிகள் தௌஹீதை காட்டிக்கொடுத்ததாக அன்று நம்மில் பலர் குற்றம் சாட்டினோம்.
ஆனால் உடைக்கப்பட்ட பள்ளிவாயல்கள் எல்லாமே தப்லீஹ், தைக்கிய்யா அமைப்பைச் சேர்ந்த பள்ளிவாயல்கள் என்பது அதைவிட உண்மை.
பேரினவாதம் முஸ்லிம்களைத்தான் இலக்கு வைக்கும். பிரிவை அல்ல.
முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும்.
- யுவர்காத்தான்குடிக்காக இர்ஷாட் ஏ. காதர்
Leave a comment