ஏறாவூர் இரட்டை கொலை சந்தேகநபர்கள் கைது

eravurஏறாவூர்: ஏறாவூர் பொலிஸ் பிரிவின் சவுக்கடி பிரதேசத்தில் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற தாய் மற்றும் மகன் இரட்டைக் கொலையின் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த வீட்டில் இருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவரவின் வழி காட்டலில் விஷேட விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் அப்துல் வஹாப் தலைமையில், பொலிஸ் உத்தியோகத்தர்களான ரோஹண, மனோகரன், தாஹா, பன்டார,சுரங்க, சாரதி பிரயசாந்த ஆகியோர் அடங்கிய குழுவினர் முன்னெடுத்த தொடர் விசாரணைகளை அடுத்தே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மிருசுவில் வடக்கு கொடிகாம், யாழ்ப்பாணம் எனும் முகவரியை சேர்ந்த ஒருவரையும், சவுக்கடி தன்னாமுனை எனும் முகவரியை கொண்ட ஆட்டோ சாரதி ஒருவரையும் கைது செய்த பொலிஸ் விசேட விசாரணை பிரிவினர், தொடர்ந்து முன்னெடுத்த விசாரணைகளின் பிரகாரம் யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரி பிரதேசத்தில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைக்கப்பட்டிருந்த நகைகளையும் கைப்பற்றி உள்ளனர்.

eravur

விசேட பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும், கொள்ளை பொருட்களும் தற்போது ஏறாவூர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் சந்தேகநபர்களை நீதி மன்றில் ஆஜர் செய்யும் நடவடிக்கைகளை ஏறாவூர் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவின் சவுக்கடி பிரதேசத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதியான தீபாவளி தினத்தன்று, 23 வயதான பீதாம்பரம் மதுவந்தி அவரது மகனான பீதாம்பரம் மதுசான் (11) ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டிருந்ததனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே கொலையின் பிரதான சந்தேகநபர்கள் விஷேட விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment