ஏழைகளின் கதவுகளையும் தட்டாமல் விடாத வசூல் குழுக்கள்!

  • இர்ஷாட் ஏ. காதர்

knocking doorகாத்தான்குடி: இயற்கை அனர்த்தங்கள் மற்றும் சமூக நெருக்கடிகளின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு காத்தான்குடி மக்கள் கடந்த காலங்களிலும், சம காலங்களிலும் வாரி வழங்கியதை மறக்க முடியாது! அல்ஹம்துலில்லாஹ்!!

பங்களாதேசில் தஞ்சமடைந்துள்ள ரொஹிங்யா முஸ்லிம்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் முகமாக காத்தான்குடியில் நேற்று நிவாரண வசூல் ஒன்று இடம்பெற்றது.

அச்சிடப்பட்ட பற்றுச் சீட்டுக்களின் வினியோகங்களும் இடம்பெற்றன.

முன்னறிவிப்புக்கள் எதுவுமின்றி வீதிகளில் களமிறங்கிய வசூல்காரர்களால் பல குடும்பங்கள் சிக்கலில் மூழ்கியிருந்தன.

மூன்று வேளை உணவுக்கும், கல்வித் தேவைக்கும் வழியின்றி வறுமைக் கோட்டிற்குக் கீழ் கௌரவமாக வாழும் ஏழைகளின் கதவுகளும் தட்டப்படுகின்றன. கையில் பணமில்லாததால் அடுத்த வீட்டிலும் கடன் பெற்று நிதி வழங்க முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு இக்குடும்பங்கள் செல்கின்றன.

பாதிக்கப்பட்ட ரொஹிங்யா முஸ்லிம்களுக்கு உதவுவது வசதி படைத்த எம் சமூகத்தவர்களுக்கு அதிக அக்கறை வர வேண்டுமே தவிர, ஏழைகளின் கதவுகள் தட்டப்படக்கூடாது.

எத்தனையோ அரசியல்வாதிகள் எம் ஊரிலும், இலங்கையிலும் இருக்கின்றனர். இவர்களைச் சந்தித்து பெரும் தொகையான நிதியினைத் திரட்ட முடியும். முஸ்லிம் கட்சிகள் இருக்கின்றன. முஸ்லிம் அமைப்புக்கள் இருக்கின்றன. அரபிப்பணம் பெற்று சேவை செய்யும் பல அமைப்புக்கள் இருக்கின்றன.

இதைவிட,

வசதி படைத்தவர்கள், வருடா வருடம் ஐரோப்பா, அமெரிக்காவென்று சுற்றுலாச் சென்று வருவோர், 10 முறை ஹஜ் சென்று வருவோர் என்று பல தரப்பட்ட செல்வந்தர்கள் எமது சமூகத்தில் இருக்கின்றனர். அவர்களிடம் சென்று பாரியளவிலான நிதியினைத் திரட்ட முடியும்.

காத்தான்குடி சமூகத்தின் வர்த்தக நிலையங்கள் இருக்கின்றன. அங்கு சென்று நிதியினைத் திரட்ட முடியும்.

இதைவிட்டுவிட்டு, வீதிகளில் சென்று வீடு வீடாகச் சென்று மைக்கைப் பிடித்துக்கொண்டு விளம்பரம் தேடுவதால் பலனேதும் இருக்கப்போவதில்லை.

மக்கள் வாரி வழங்கிய நிதிபோல் அவை தெரியப்படுத்தினாலும், அவற்றுள் பிடுங்கி எடுக்கப்பட்ட ஏழையின் பணமும் கலந்திருப்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

உழ்ஹிய்யா மற்றும் பேரீத்தம்பழ விநியோகங்களுக்கு தகுதியில்லை என்று ஒதுக்கி வைக்கப்பட்ட ஏழைகளின் வீட்டுக்கதவுகளையும் கடந்த கால வெள்ள நிவாரண வசூலின்போது தட்டாமல் விட்டதில்லை.

மேற்கூறப்பட்டவர்களிடம் சென்று நிதி சேகரிப்பதில் அசௌகரியம் என தாங்கள் உணர்ந்தால் பள்ளிவாயல் ரீதியாக முன்னறிவிப்புச் செய்து ஜூம்ஆவின்போது வாளி வைத்து பொது வசூல் ஒன்றைத் திரட்ட முடியும். விரும்பியவர்கள் நிதியளிப்பர். இதனால் தூய்மையான நோக்கத்தை அடைந்து கொள்ள முடியும்.

எனவே, நிவாரனப் பணி அளப்பரியது. அவை பிடிங்கி எடுக்காமல் விரும்பி வழங்க வழிசமைக்க வேண்டும்.YKK

  • யுவர் காத்தான்குடிக்காக இர்ஷாட் ஏ. காதர்

Published by

Leave a comment