“ரோஹிஞ்சா முஸ்லிம்களை மியான்மர் திரும்ப ஏற்றுக்கொள்ள வேண்டும்”- ஷேக் ஹசீனா

refugee rohingyaடாக்கா: மியான்மரிலுள்ள ரக்கைன் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வன்முறைகளால் தப்பியோடிய பல லட்சக்கணக்கான ரோஹிஞ்சா முஸ்லிம்களை மியான்மர் திரும்ப ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வலியுறுத்தியுள்ளார்.ஓர் அகதிகள் முகாமை பார்வையிட்டபோது பேசுகையில், எந்தக் குற்றமும் செய்யாத மக்கள் துன்புறுவதால், மனிதநேயத்தோடு இந்த நிலைமையை அணுக வேண்டும் என்று ஷேக் ஹசீனா கூறியுள்ளார்.

கடந்த மாதம் மியான்மரில் வன்முறைகள் தொடங்கிய பின்னர் சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் ரோஹிஞ்சா மக்கள் அந்நாட்டு எல்லையை கடந்து வெளியேறியுள்ளனர்.

ரோஹிஞ்சா ஆயுதப்படையினரை குறிவைத்து தாக்குவதாக தெரிவிக்கின்ற மியான்மர் ராணுவம், பொது மக்களை இலக்கு வைப்பதாக கூறப்படுவதை மறுத்துள்ளது.ஆகஸ்ட் 25 ஆம் தேதி ரோஹிஞ்சா ஆயுதப்படையினர் நடத்திய தாக்குதலுக்கு கொடூர வன்முறை நடவடிக்கைகளால் அரசு படைப்பிரிவுகள் பதிலடி வழங்கியதாக அந்நாட்டை விட்டு வெளியேறியோரில் பலர் தெரிவித்துள்ளனர்.

மியான்மரின் படை, சமீபத்தில் நிலக் கண்ணிவெடிகளை புதைத்து வைத்துள்ளதாக கூறப்படும் வங்கதேசத்தின் குற்றச்சாட்டை மியான்மர் அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

refugee rohingya

பௌத்த மதத்தினர் பெரும்பான்மையாக வாழும் மியான்மரின் ரக்கைன் மாநிலத்தில் வாழும் முஸ்லிம் சிறுபான்மையினர்தான் ரோஹிஞ்சா மக்கள். இவர்களை “சட்டப்பூர்வமற்ற குடியேறிகள்” என்று கூறுகின்ற மியான்மரில், இவர்கள் நீண்டகாலமாக சித்ரவதை அனுபவித்து வருகின்றனர்.

மியான்மரில் இதற்கு முன்னதாக வெடித்த வன்முறையால் தப்பியோடிய லட்சக்கணக்கான ரோஹிஞ்சா மக்கள் வங்கதேசத்தில் உள்ளனர். இரண்டு அதிகாரப்பூர்வ அகதிகள் முகாம்களில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் நிறைந்துள்ளனர். புதிதாக இங்கு வந்துள்ளோருக்கு உணவு, உறைவிடம் மற்றும் மருத்துவ உதவி அவசரமாக தேவைப்படுவதாக உதவி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அதிகாரப்பூர்வ முகாம்களில் ஒன்றான குடுபாலாங் முகாமை பார்வையிட்டபோது, ஷேக் ஹசீனா இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

“என்னுடைய தனிப்பட்ட கருத்து மிகவும் தெளிவாக உள்ளது. அவர்கள் இந்தப் பிரச்சனையை மனிதநேயத்தோடு அணுக வேண்டும், இந்த குற்றமறியாத மக்கள், குழந்தைகள், பெண்கள் துன்பப்படுவதால் இதனை கூறுகிறேன். இவர்கள் மியான்மரை சேர்ந்தவர்கள். நூற்றுக்கணக்கான ஆண்டுகள் இவர்கள் அங்கு வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் தங்களுடைய குடிமக்கள் அல்ல என்று எப்படி மியான்மர் மறுக்க முடியும்?” என்று ஷேக் ஹசீனா கேள்வி எழுப்பியுள்ளார்.மியான்மர் திருப்பி ஏற்றுக்கொள்ளும் வரை, ரோஹிஞ்சா மக்களுக்கு வங்கதேசம் உறைவிடம் வழங்கும் என்று வங்கதேச பிரதமர் தெரிவித்துள்ளார்.

வன்முறை நடவடிக்கைகளில் ஆயுதப் படையினரின் பங்கை கண்டித்த அவர், மியான்மர் அரசு இந்த நிலைமையை மேலும் பொறுமையோடு கையாண்டிருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார்.

1970களில் இருந்து மியான்மரில் ஏற்படும் வன்முறைகளை அடுத்து ரோஹிஞ்சா குடும்பங்கள் வங்கதேசத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. ஏறக்குறைய 32 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட அகதிகள் வங்கதேசத்திலுள்ள இரண்டு அதிகாரப்பூர்வ முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.

தற்போதைய நெருக்கடியினால் மக்கள் அகதியாக வருவதற்கு முன்னரே 3 லட்சம் ரோஹிஞ்சாக்கள் எவ்வித ஆவணமும் இல்லாமல் வங்கதேசத்தில் வாழ்ந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Published by

Leave a comment