முன்னாள் அமைச்சர் அஸ்வர் காலமானார்

  • MSM. ஸாஹிர்

azverகொழும்பு: முன்னாள் முஸ்லிம் சமய விவகார இராஜாங்க அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம். அஸ்வர் 29-08-2017  இரவு 7.15 மணியளவில் தனியார் வைத்தியசாலையில் காலமானார். “இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்” மரணிக்கும் போது அவருக்கு வயது 80.

4 பிள்ளைகளின் தந்தையான இவர், லங்கா சமசமாஜக் கட்சி மூலம் அரசியலுக்குப் பிரவேசித்து பின்பு ஐ.தே.க மூலம் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகவும், முஸ்லிம் சமய விவகார இராஜாங்க அமைச்சர் மற்றும் பாராளுமன்ற விவகார இராஜாங்க அமைச்சர் பதவிகளை வகித்ததோடு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகராகவும் பணிபுரிந்தார்.

azver

ஆசிரியராக மட்டுமல்லாது மஹரம தினகரன் பத்திரிகை செய்தியாளராக தனது பொது வாழ்வை ஆரம்பித்த இவர், கலாநிதி ரீ.பி. ஜாயா, டாக்டர் எம். சீ. எம். கலீல், எம். எச் . முஹம்மத், எம். ஏ. பாக்கிர் மாக்கார் உட்பட பல முஸ்லிம் தலைவர்களோடு நெருங்கி செயற்பட்டார்.

azver mahinda

ஜனாஸா இன்று (30) மாலை தெஹிவளை பெரிய பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படும்.

தெஹிவளை, பாத்தியாமாவத்தை, இலக்கம் 04 என்ற முகவரியிலுள்ள அவரது வீட்டிலிருந்து ஜனாஸா நல்லடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும்.

மறைந்த ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா மற்றும் ஆர். பிரேமதாசா ஆகியோரின் பொது உரைகளைத் தமிழில் மொழி பெயர்ப்பவராக விளங்கிய அஸ்வர், அத்தலைவர்களின் நம்பிக்கைக்குரிய அரசியல்வாதிகளில் ஒருவராகவும் இருந்தார்.

அமைச்சுப் பதவிகள்

1990ம் ஆண்டு தொடக்கம் 2004 வரை ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த காலத்தில் முஸ்லிம் விவகார ராஜங்க அமைச்சு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் ராஜங்க அமைச்சுப் பதவிகளும் இவருக்கு வழங்கப்பட்டிருந்தன.

2008ம் ஆண்டு ஐ.தே.கட்சி தலைமையுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அதிலிருந்து விலகி ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டார். அவ்வேளை பதவியிலிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் ஜனாதிபதியின் ஆலோசகர்களில் ஒருவராகப் பணியாற்றும் வாய்ப்பை இவர் பெற்றிருந்தார்.

ராஜபக்ச ஆதரவு அணியில்

2010ம் ஆண்டு அக் கட்சியின் சார்பில் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆதரவு அணி முக்கியஸ்தர்களில் ஒருவராகவும் விளங்கினார்.

தனது பதவிக் காலத்தில் நாடாளுமன்றத்தில் எதிரணியுடன் வாதம் புரிவதில் ஆற்றல் மிக்கவர் என்ற அடையாளத்தை கொண்டிருந்த அவர், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளிடம் நன்மதிப்பையும் பெற்றிருந்தார்.

அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சிறந்த பேச்சாளர் , கவிஞர் , எழுத்தாளர் பத்திரிகையாளர் , மும்மொழி ஆற்றல் பெற்றவர் என பல பரிமாணங்களைக் கொண்டிருந்த அன்வர் முஸ்லிம் சமூக அமைப்புகளிலும் முக்கியப் பதவிகளை வகித்திருக்கிறார்.

Published by

Leave a comment