லண்டன்: “காத்தான்குடி வெல்ஃபெயார் ஓர்கனைசேசன்” (KWO) ஏற்பாடு செய்த ஐக்கிய இராச்சியத்தில் வாழும் காத்தான்குடி மக்களுக்கான 4வது ஒன்று கூடல் கடந்த 30-07-2017 ஞாயிற்றுக்கிழமை மில்டன்கெய்ன்ஸ் நகரின் எழில் கொஞ்சும் எம்பேர்டன் பூங்காவில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
காலை 11 மணியிலிருந்து ஆரம்பமான இவ்வொன்றுகூடல் இரவு 10 மணிவரைக்கும் இடம்பெற்றது.
ஐக்கிய இராச்சியத்தில் பல இடங்களிலும் பரந்துவாழும் காத்தான்குடி சகோதர, சகோதரிகள் மிக மிக ஆர்வத்தோடு இவ்வொன்றுகூடலில் கலந்துகொண்டு தங்களது மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.
பகற்போசணமாக மட்டன் பிரியாணி, கோழிப்பொரியல், முந்திரியம்பருப்பு மிக்ஸ்ட் மரக்கறியுடன் பிரமாதமாக ஆரம்பமான இந்நிகழ்வு, இரவுச் சாப்பாடு கொத்துரொட்டியுடன் நிறைவுக்கு வந்தது.
இதைவிடவும், சோளங்குலை அவியல், கேக், வண்டப்பம், மாங்காய்ச் சம்பல் மற்றும் சமூசா போன்ற சிற்றுண்டிகளும் நாவுக்கு ருசியாக இருந்தன.
அருவியுடன் கலந்து இதமாக தவழ்ந்துவந்த தென்றலால் குளிர்ந்துபோன வரண்ட நாக்குகளை நனைத்துச் சென்றது காவா! அது கபூர் காக்காவின் காவாவை விடவும் பிரமாதம்!
சிறுவர் பெரியோருக்கான விளையாட்டு நிகழ்ச்சிகளும், சிறுவர்களுக்கான சான்றிதழ் மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகளும் கிரிக்கட் போட்டியும் ஆரவாரமாக இடம்பெற்றன.
மழலைகளின் ஒலிகளும், சிறுவர்களின் துள்ளல்களும், இளைஞர்களின் அலசல்களும், பெரியவர்களின் ஆறுதல்களும்……. மகளிரின் உறவாடல்களும் பச்சைப் பசேலென அமைந்த எம்பேர்டன் பூங்காவை மென்மேலும் அலங்கரித்துச் சென்றன.

5வது ஒன்றுகூடல் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் கிறிஸ்மஸ் விடுமுறையில் READING நகரில் ஏற்பாடு செய்வதாக ஆலோசிக்கப்பட்டது. எனினும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இவ்வொன்றுகூடல் என்றுமில்லாதவாறு தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக அனைவரும் தெரிவித்து விடைபெற்றனர்.
Leave a comment