- நமது நிருபர்
லண்டன்: ஐக்கிய இராச்சியத்தில் ரெடிங் (Reading) நகரில் வசித்துவரும் சப்ரான் சத்தார், பிரசித்திபெற்ற சவ்த்தம்ப்டன் பல்கலைக்கழகத்தில் (University of Southampton) 6 வருட வைத்தியக் கற்கை நெறியைப் பூர்த்திசெய்து, வைத்தியராக பட்டம் பெற்றார். “அல்ஹம்துலில்லாஹ்”! இப்பட்டமளிப்பு விழா 21-07-2017 வெள்ளிக்கிழமை சவ்த்தம்ப்டன் பல்கலைக்கழக வரவேற்பு மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
தனது ஆரம்பக் கல்வியை காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையில் கற்ற இவர், 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்று, இடைநிலைக் கல்வியைத் தொடர மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரிக்குத் தெரிவானார்.
பின்னர் 2003ம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்துக்கு தனது குடும்பத்தோடு இடம்பெயர்ந்து, அங்கு தனது கல்வியைத் தொடர்ந்தார்.
இதன் பின்னர் கடந்த 2009 ம் ஆண்டு ஒக்ஸ்ஃபேர்ட்ஷெயர் (Oxfordshire) மாவட்டத்தில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் (Biological Science) முதலாம் இடத்தைப்பெற்று விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
6 வருட மருத்துவக் கற்கை நெறியைப் பூர்த்திசெய்த சப்ரான் சத்தார், ஒரு வருட மேலதிக கற்கை நெறியினை லண்டன் இம்பீரியல் (London Imperial College) கல்லூரியில் பூர்த்தி செய்தார்.
மேலும், இவரது சகோதரிகளான பாத்திமா சப்னா, உலகப் புகழ்பெற்ற ஒக்ஸ்ஃபேர்ட் புரூக் (Oxford Brookes) பல்கலைக்கத்தில் Bio Medical Science பட்டதாரியாவார். பாத்திமா சஸ்னா இதே பல்கலைக்கழகத்தில் அதே பிரிவில் இரண்டாம் வருடத்தில் தற்போது கல்வி கற்றுக்கொண்டிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சப்ரான், காத்தான்குடி 6ம் குறிச்சி ராசா ஆலிம் வீதியைச் சேர்ந்த அல்ஹாஜ். அப்துல் சத்தார்-சுபைதா பீவி ஆகியோரின் சிரேஷ்ட புதல்வராவார்.

இவர், ஐக்கிய இராச்சியத்தில் வைத்தியத் துறையில் பட்டம்பெற்ற முதலாவது காத்தான்குடி மாணவன் என்ற பெருமையைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
எமது ஊருக்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்த டொக்டர் சப்ரான் அவர்களை எமது இணையத்தள நிர்வாகம் மற்றும் எமது வாசகர்கள் சார்பாக பாராட்டுவதோடு, அவரது வளமான எதிர்காலத்திற்கு வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றோம்.
Leave a comment