காத்தான்குடியில் இன்று திருமணநாள்!

  • நமது நிருபர்

marriage_-_hands[1]காத்தான்குடி: நோன்புப் பெருநாள் கொண்டாட்டம் காத்தான்குடிக்கு இன்னும் நிறைவடையவில்லை. பண்டைய கால காத்தான்குடிக்கு திருமணவரலாறு என்று தனித்தன்மையுண்டு. அவற்றுள் திருமணத்துக்கான காலம் நோன்புப் பெருநாள் மாதமும், ரபியுல் அவ்வல் எனும் “கொண்டாட்ட” மாதமுமாகும். இவ்விரண்டு மாதங்களிலும் காத்தான்குடியில் திருமணங்கள் அதிகமாக இடம்பெறும்.

இன்று வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாளைத் தொடர்ந்துவரும் 4வது நாள். திருமண வீடுகளும், காத்தான்குடி கடற்கரையும் இன்று “மண்போட்டாலும் கீழே விழாது” என்ற அளவுக்கு சொந்தபந்தங்களாலும், சனத்திரளாலும் நிறைந்திருக்கும்.

ஊரின் முக்கிய ஜூம்ஆ பள்ளிவாயல்களில் ஒரே நேரத்தில் பல திருமணங்கள் இடம்பெறவும் வாய்ப்பிருக்கின்றது.

நோன்பு இருபத்தேழில் இருந்து ஊருக்கு வந்த வெளியூர் வியாபாரிகளும், அரசாங்க ஊழியர்களும் மற்றும் மாணவர்களும் பெருநாள் கொண்டாட்டங்களில் தங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதைக் காணக்கிடைக்கிறது.

இறைச்சிக்கடைகளும், செல்வந்தர்களின் மீன்களும் தனவந்தர்களுக்காக ஒவ்வொரு காலையும் காத்திருக்கின்றன.

“டேஸ்ட்” கடைகளும், உணவகங்களும் இளைஞர்களைக் கட்டுப்போட மாலை நேரங்களில் தயாராகின்றன. சூட்டைத்தணிக்க ஐஸ் கிரீமும், ஃபாலுடாவும் மதிய நேரத்தை அலங்கரிக்கின்றன.

இதைவிடவும், ஞாயிற்றுக்கிழமையும் ஏராளமான திருமண நிகழ்வுகள் இடம்பெற இருக்கின்றன. காத்தான்குடி கடற்கரையும் ஞாயிற்றுக்கிழமை ஓர் கலைகட்டிப்போட்டுத்தான் விடும்போல் தெரிகிறது.

பெருநாள் அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை பாடசாலைக்கு வருமாறு மாணவர்களுக்கு அழைப்புக்கொடுத்தாலும் யாரும் பாடசாலைப் பக்கம் திரும்பிப்பார்த்ததாகத் தெரியவில்லை. மாணவர்கள் வரும் திங்கட்கிழமைதான் பாடசாலைப்பக்கம் தலைவைத்துத் தூங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெருநாள் அன்று ஆட்டிறைச்சிப் பங்கில் வழமை போன்று அநீதி இழைக்கப்பட்டதாக பலர் சுட்டிக்காட்டுகின்றனர். இறைச்சிப்பங்கில் இறைச்சியைத் தேடவேண்டி இருந்ததாகவும், இறைச்சிக்கடைகளில் கடாய் இறைச்சில் பெட்டை இறைச்சியை கலப்படம் செய்ததாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

வெள்ளிக்கிழமை திருமண தம்பதிகள், ஞாயிற்றுக்கிழமை வலீமா விருந்து கொடுப்பதால், கடற்கரை வரவேற்பு மண்டபங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அறிய முடிகிறது.

இன்றைய திருமண பந்தத்தில் இணையும் அனைத்து தம்பதியினருக்கும் எமது வாழ்த்துக்கள்!

Published by

Leave a comment