ஈரான் நாடாளுமன்றத்திலும், கொமைனி சமாதியிலும் துப்பாக்கிச் சூடு

டெஹ்ரான்: ஈரானின் நாடாளுமன்றம் மற்றும் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அயத்தொல்லா கொமெனி வழிபாட்டிடத்திலும் ஆயுதம் தரித்த நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக ஈரான் ஊடகங்கள் கூறுகின்றன. நாடாளுமன்றத்திற்குள் குறைந்தது ஒரு நபர் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒரு பாதுகாவலர் காயமடைந்தார் என்று செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.

காயமடைந்த நபர்களின் எண்ணிக்கை பற்றி முரண்பாடான தகவல்கள் வெளியாகியுள்ளன.

நவீன ஈரானின் நிறுவனரான அயத்தொல்லா கொமெனியின் வழிபாட்டிடத்தில் நடந்த தாக்குதலில் பலர் காயமடைந்தனர். தென் டெஹ்ரானில் உள்ள இந்த கொமெனி வழிபாட்டிடத்தை மூன்று ஆயுததாரிகள் தாக்கினர் என்று ஃபார்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.

தாக்குதல்தாரிகளில் இருவர் அந்த இடத்துக்கு வந்தவர்களை சுட்டனர். அதே நேரத்தில் மூன்றாவது நபர் “தற்கொலை குண்டை வெடித்து இறந்துள்ளார்,” என்று அரசாங்கத்தின் பாதி கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவம் முடிவடைந்துவிட்டது என்று சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். கட்டடத்தின் உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்புப் படையினர் குவிந்தனர் என்று அவர் கூறினார். ”ஏ கே 47 துப்பாக்கிகளை கொண்ட தாக்குதல்தாரிகள் நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் இருந்தனர்,” என்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூறியதாக ஈரானின் ஐ ஆர் ஐ பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

“இரண்டு ஏ கே 47 துப்பாக்கிகள் மற்றும் ஒரு குட்டி துப்பாக்கியை மூன்று தாக்குதல்தாரிகள் வைத்திருந்தனர் ,” என்று எம்.பி. எலியாஸ் ஹஸ்ரதி தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இரண்டு பாதுகாவலர்கள் காயமடைந்துள்ளதாகவும் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

கொமெனி சமாதி இருக்கும் இடம் நாடாளுமன்றத்துக்கு பல கிலோமீட்டர்கள் தெற்கில் இருக்கிறது , அங்கு நடந்த தாக்குதல் சம்பவம் ஒரே நேரத்தில் நடந்தது என்றும், சரியாக ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டதுபோல் தோன்றுவதாகவும் செய்திகள் கூறின.

Published by

Leave a comment