பதுரிய்யா ஹாஜா கந்தூரி

baduriya– இர்ஷாட் ஏ. காதர்

காத்தான்குடி: காத்தான்குடி 5, பதுரிய்யா ஜூம்ஆப் பள்ளிவாயலில் கடந்த 31 வருடங்களாக இடம்பெற்றுவரும் ஹாஜா கந்தூரி வழமை போன்று இம்முறையும் அதிவிசேடமாக இடம்பெறுகிறது. ஆண்களும், பெண்களும் அணியணியாய் நிறைந்து வர்ணஜாலங்களால் அலங்கரிக்கப்பட்ட பதுரிய்யா பள்ளிவாயலைக் காண இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் புத்தாடைகளுடன் வருகை தந்தவண்ணமிருக்கின்றனர்.

“அருள்வாரி வழங்குவார்” – “உதவி புரிவார்” எனும் தொணியில், கோடியைத் தொடும் வருமானங்களுடன் இக்கந்தூரி காத்தான்குடியில் இடம்பெறுகிறது. உள்ளுர் பிரமுகர்களும், முஹிப்பீன்களும், வெளியூர் வர்த்தகர்களும், வெளிநாட்டில் தொழில் புரிபவர்களும் இக்கந்தூரிக்கு என்றுமில்லாதவாறு வாரி வழங்குகின்றனர் என்பதைவிட வாரி வழங்கவைக்கப்படுகின்றனர் என்றே கூறமுயும்.

வர்த்தகர்களுக்கு வர்த்தகர்கள் போட்டி போட்டு, “செய்குனா”வுக்கு முன்னால் எனது பெயர், பணப்பட்டியலில் முன்னிற்க வேண்டும் என புகழ்மாலையில் பல இலட்சங்கள் வாரி வழங்கப்படுகின்றன.

baduriya

கந்தூரியை எதிரிகள் குழப்பி விடக்கூடாது என்பதற்காக தேசியக் கொடி ஏற்றப்பட்டு, பொலிஸாரும், அதிரடிப்படை அதிகாரிகளும் அழைக்கப்பட்டு சன்மானங்களும் வழங்கப்படுகின்றன. கந்தூரியின் பாதுகாப்பைவிட, பதுரியாவின் ஆயுட்காலப் பாதுகாப்புக்கு இந்த கௌரவம் இவ்வதிகாரிகளுக்கு வழங்கப்படுகின்றன.

கோடி வருமானத்தில் பலவர்ண “பெணர்”களுக்கும், மின் விளக்குகள், தொண்டர் தேநீர்ச் செலவுகள், அவர்களுக்கான சிற்றுண்டிகள் என அருள் பணம் கரைந்து செல்கின்றன.

தொடர்ந்தும் நோய்வாய்ப்பட்டவர்கள் தங்களது நோயை ஹாஜாவின் அருளால் 30 வருடங்களாக அல்லது அதற்கும் குறைவான காலப்பகுதியில் குணப்படுத்த முடியாதநிலை முஹிப்பீன் குடும்பத்தில் தொடர்கிறது.

தலைமை பீடம் உட்பட, தொண்டர்பீடம் வரை தனக்கு ஏற்படும் வியாதிகளை ஹாஜாவின் அருளாள் குணப்படுத்த முடியாமல் மட்டு, கொழும்பு வைத்தியசாலைகளில் படுத்துறங்கி குணப்படுத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் அவர்களிடத்தில் ஏற்படுவதையும் காணமுடிகிறது.

தனது வியாபாரத்தை தொடர முடியாமல், வீடுகளையும், மனைவியின் நகைகளையும் வட்டிக்கு ஈடுவைத்து வியாபாரத்தைத் தொடரும் பரிதாபம் இவர்களிடத்திலும் தொடர்கிறது.

சோறு சமைத்துக் கொடுப்பதுடன், அன்னதானம் என்ற பெயரில் அனாதை ஆதரவு நிலையங்களுக்கும் சோத்துப்பார்சல்கள் வழங்குவதுடன் கந்தூரி நிறைவுக்கு வரும்.

rauf moulavi

உண்மையில் அருள்வேண்டி செய்யப்படும் கந்தூரி அல்ல என்பது முஹிப்பீன்களுக்கும் நன்றாகத் தெரியும். எனினும், ஊரில் தங்களுக்கு இருக்கும் எதிர்ப்புக்களுக்கு சவாலாக இக்கந்தூரி நடாத்தப்படுகிறது.

பல மாதக்கணக்கில் முயற்சி செய்து அமைத்த அலங்காரங்களும், தோரணங்களும் வழமைபோன்று கழட்டி வீசப்பட்டு, கரைந்து செல்லும்.

முஹிப்பீன் ஏழைத் தொழிலாளி இன்றும் ஏழையாகவும், முஹிப்பீன் ஏழைக் குடும்பம் இன்றும் ஏழ்மையாகவும் இருந்து வருவது கந்தூரியின் அருளுக்கு சவாலாகும்.

(படங்கள்: முகநூல் நட்பு)

Published by

Leave a comment