-
முகம்மத் இக்பால், சாய்ந்தமருது
2௦௦1 இல் நோர்வே அரசாங்கம் முஸ்லிம் காங்கிரசுக்கு பணம் வழங்கியதாக ஆதாரமில்லாத குற்றச்சாட்டினை 16 வருடங்களுக்கு பின்பு முன்வைத்துள்ளார்கள். இந்த குற்றச்சாட்டினை முன்வைக்க ஏன் இவ்வளவு காலம் தேவைப்பட்டது? சர்வதேச ரீதியில் நன்மதிப்பினை பெற்றுள்ள நோர்வே மு.கா க்கு பணம் வழங்குவார்களா? ஏன் பணம் வழங்க வேண்டும்? அப்படி வழங்குவதனால் அவர்கள் அடையும் நன்மைகள் என்ன? இதற்குரிய ஆதாரம் உண்டா? என்ற கேள்விகளுக்கு விடை வழங்குவதற்கு யாரும் இல்லை.
இஸ்ரேல் – பாலஸ்தீன சமாதான பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தராக செயல்பட்டு சில காலங்கள் மத்தியகிழக்கில் அமைதியை உருவாக்கி தன்னை ஓர் சமாதான தூதுவராக உலகுக்கு காண்பித்த நாடுதான் நோர்வே.
அதேபோல் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்திலும் நோர்வே தலையிட்டு சந்திரிக்காவின் அரசாங்கத்துக்கும், புலிகளுக்கும் இடையில் மத்தியஸ்தராக செயல்பட்டு சமாதான பேச்சுவார்த்தைகளுக்கான முயற்சிகளை மேற்கொண்ட வேளையில்தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
பின்பு சமாதான முயற்சிகளை கைவிடாமல் தொடர்ந்து ரணில் தலைமையிலான ஐ.தே. கட்சி அரசாங்கத்துக்கும், புலிகளுக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தையை நோர்வே மேற்கொண்டது.
இந்த இடத்தில் நோர்வே பணம் வழங்குவதாக இருந்தால், பேச்சுவார்த்தை மேசையில் சம அந்தஸ்துடன் அமருகின்ற இரு இராணுவ சக்திகளான ஐ.தே.க அரசாங்கத்துக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் வழங்கி இருக்க வேண்டும். ஆனால் முஸ்லிம் காங்கிரசுக்கு பணம் வழங்க வேண்டிய தேவை என்ன?
அன்றைய ஐ.தே. கூட்டணியில் மு.கா போன்று பல கட்சிகள் உள்ளடங்கி இருந்தது. அப்படி பணம் வழங்குவதாக இருந்தால் அவை அனைத்துக்கும் வழங்கியிருக்க வேண்டுமே? இது சாத்தியமாகுமா? உலக சமாதானத்துக்காக பாடுபடுகின்ற ஒரு நாடு இவ்வாறான செயல்பாடுகளை மேற்கொள்ளுமா?
1989 இல் இந்திய படையினர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று அன்றைய ஜனாதிபதி பிரேமதாசா காலக்கெடு விதித்தார். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திய விடுதலை புலிகள் பிரேமதாசாவிடமிருந்து பணமும், ஆயுதங்களும் பெற்றுக் கொண்டார்கள்.
அதேபோல், 2௦௦5 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்க இருந்த தமிழ் மக்களை வாக்களிக்க செல்லாமல் தடுத்ததன் மூலம், ரணில் விக்கிரமசிங்கவினை விடுதலை புலிகள் திட்டமிட்டு தோற்கடித்தார்கள். இவ்வாறானதொரு திட்டத்துக்காக அன்றைய வேட்பாளர் மகிந்த ராஜபக்ஸவிடமிருந்து பெருமளவு பணத்தினை புலிகள் பெற்றுக் கொண்டார்கள்.
அவ்வாறு புலிகள் பணம் பெற்றுக்கொண்ட விடயம் அப்போது பகிரங்கமாக பேசப்பட்டது. ஆனாலும் புலிகளை தமிழ் தரப்பிலிருந்து எவரும் விமர்சிக்கவில்லை.அதுமட்டுமல்லாது ஆரம்ப காலங்களில் தமிழ் ஆயுத இயக்கங்கள் வங்கிக் கொள்ளைகளில் ஈடுபட்டார்கள். ஆனால் எந்த தமிழ் அமைப்புக்களும் அதற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை. பணம் இல்லாவிட்டால் ஒரு விளையாட்டு கழகத்தினைகூட நடாத்த முடியாது என்பது யாவரும் அறிந்த விடயம்.
இங்கே ஒரு விடயத்தினை புரிந்துகொள்ள வேண்டும். அதாவது மஹிந்தவிடம் பணம் வாங்கியதற்காக ரணிலை தோற்க்கடிக்கவில்லை. ரணில் ஆட்சிக்கு வந்தால் ஆபத்து என்பதனை உணர்ந்த புலிகள், அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தினார்கள். அதுதான் அரசியல் இராஜதந்திரம்.
அவ்வாறு சிங்கள தலைவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டதற்காக எந்த சந்தர்ப்பத்திலும் விடுதலை புலிகள் எந்த ஆட்சியாளர்களுக்கும் தங்களது கொள்கையினை விட்டுக்கொடுத்ததுமில்லை.
அதேபோல் தேர்தல் செலவுக்காக முஸ்லிம் காங்கிரஸ் பணம் பெற்றுக்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்த போதிலும், தேசிய கட்சிகளுக்கு அடிமையாக ஒருபோதும் முஸ்லிம் காங்கிரஸ் இருந்ததில்லை.
முஸ்லிம் மக்களுக்கு எதிராக பிரச்சினைகள் ஏற்பட்டபோது ஆட்சியாளர்களை கண்டித்தது மட்டுமல்லாமல் தங்களது அமைச்சர் பதவிகளை தூக்கி எறிந்துவிட்டு மக்களுக்காக போராடிய வரலாறுகள் முஸ்லிம் காங்கிரசுக்கு நிறைய உண்டு.
இவர்கள் கூறுவது போன்று தேசிய கட்சிகளிடம் பணம் பெற்றிருந்தால் ஒவ்வொரு காலகட்டத்திலும் இக்கட்சிகளுடன் சமூகத்துக்காக முறண்பட்டுக்கொண்டு மு.கா. வெளியேறியபோது, மு.கா மீது இல்லாத பொல்லாத அபாண்டமான குற்றங்கள் எல்லாம் தேசிய கட்சிகளால் சுமத்தப்பட்டது. ஆனால் பணம் வழங்கியதாக அவர்களால் ஏன் குற்றம் சுமத்தபடவில்லை?
விடயம் இதுதான் தங்களுக்கு மு.கா. தலைவரிடமிருந்து பதவிகள் கிடைக்காத போதெல்லாம் இல்லாத பொல்லாத கதைகளைக்கூறி பழி தீர்த்துக்கொள்வது எமது சமுதாயத்துக்கு பழக்கப்பட்டுபோன விடயங்களாகும்.
எனவே மு.கா. தேசிய கட்சிகளிடமும், ஏனய சக்திகளிடமும் பணம் பெற்றுகொண்டதாக இவர்கள் இப்போது கூறும் எந்தவொரு குற்றச்சாட்டுக்களும் ஒரு ஊகங்கள் அடிப்படையில் கூறப்பட்டுள்ளதே தவிர, ஆதாரபூர்வமாக உறுதிப்படுத்தபடவில்லை.
சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருக்கின்ற முஸ்லிம் காங்கிரசின் எதிரிகள் இந்த ஆதாரமில்லாத குற்றச்சாட்டினை பெரிதுபடுத்திக்கொண்டு தங்களது ஊடக பலத்தின்மூலம் மக்களை குழப்பி மு.கா. அழிக்க முற்படுகின்றார்கள். ஆனால் இவ்வாறு குழப்புகின்றவர்கள் மீது ஆதாரபூர்வமான ஊழல் குற்றச்சாட்டுக்கள் உண்டு என்பதனை மறந்துவிட்டார்கள்.
முற்றும்.
2௦௦1 இல் நோர்வே அரசாங்கம் முஸ்லிம் காங்கிரசுக்கு பணம் வழங்கியதாக ஆதாரமில்லாத குற்றச்சாட்டினை 16 வருடங்களுக்கு பின்பு முன்வைத்துள்ளார்கள். இந்த குற்றச்சாட்டினை முன்வைக்க ஏன் இவ்வளவு காலம் தேவைப்பட்டது? சர்வதேச ரீதியில் நன்மதிப்பினை பெற்றுள்ள நோர்வே மு.கா க்கு பணம் வழங்குவார்களா? ஏன் பணம் வழங்க வேண்டும்? அப்படி வழங்குவதனால் அவர்கள் அடையும் நன்மைகள் என்ன? இதற்குரிய ஆதாரம் உண்டா? என்ற கேள்விகளுக்கு விடை வழங்குவதற்கு யாரும் இல்லை.
Leave a comment