கூச்சல், குழப்பம்; பாராளுமன்றம் ஒத்திவைப்பு

parliament (2)கொழும்பு: ஜெனீவா மனித உரிமைகள் சபையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் இன்றைய தினம் (06) விவாதங்கள் இடம்பெறவிருந்த நிலையில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள், அவை நடவடிக்கையை குழப்பியதால் பாராளுமன்றத்தை நாளை (07) வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

இன்றைய (06) அவை நடவடிக்கைகள், மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை இடம்பெறவுள்ளதாக இருந்த நிலையில் இவ்வாறு அவை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், அநுர குமார திசாநாயக்க மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரால், தங்களது கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கால எல்லை போதாது எனத் தெரிவித்திருந்த நிலையில், பாராளுமன்றத்தில் கூச்சல் குழப்ப நிலை ஏற்பட்டது.

இதனை அடுத்து, ஆளும் கட்சிக்கான வாய்ப்பிலிருந்து, மேலும் 30 நிமிட கால அவகாசம் வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

ஆயினும், குறித்த கால எல்லை போதாது என குறித்த இரு கட்சிகளும் தெரிவித்து தொடர்ந்தும் சபை அமர்வுகளை குழப்பியதால், பாராளுமன்றத்தின் இன்றைய அவை நடவடிக்கைகளை, நாளை வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

Published by

Leave a comment